நீதிபதியை தாக்கியவருக்கு மீண்டும் அதே நீதிபதியால் தீர்ப்பு!

0
121

லஸ் வேகாஸில் உள்ள மாகாண நீதிமன்றத்தில் கடந்த வாரம் நீதிபதியைத் தாக்கிய ஒரு காணொளி இணையத்தில் வைலரானது. இதனைதொடர்ந்து குற்றவாளியான தியோப்ரா ரெட்டன் தொடர்ந்து தடுப்பு காவலில் வைக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது தண்டனைக்காக மீண்டும் நீதிமன்றத்திற்குத் திரும்பினார்.

குறித்த காணொளியை ரொய்ட்டர்ஸ் வெளியிட்டிருந்ததுடன் அவரை பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் பொலிஸார் அழைத்து வருகின்றதையும் காணக்கூடியதாக இருந்தது. மேலும் அவரால் கடந்தவாரம் தாக்கப்பட்ட அதே நீதிபதியான மேரி கே.ஹோல்தஸால் மீண்டும் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

சிறை தண்டனை வழங்கிய நீதிபதியை அவரது மேசை மீது பாய்ந்து குற்றவாளி ஒருவர் தாக்கிய சம்பவம் அமெரிக்காவின் லஸ் வேகாஸின் மாகாண நீதிமன்றத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

நீதிமன்ற வளாகத்தில் உள்ள கெமராவில் பதிவான இந்த வன்முறைத் தாக்குதல் காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தன.

தாக்குதலுக்கு உள்ளான க்ளார்க் கவுன்ட்ரி மாகாண நீதிபதி மேரி கே.ஹோல்தஸ் தனது இருக்கையில் இருந்து பின்னால் சுவரில் விழுந்ததில் சிறு காயம் அடைந்தார்.

எனினும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் அளவுக்கு காயங்கள் இல்லை. ஆனால் நீதிபதியின் உதவிக்கு வந்த காவலாளிக்கும் காயம் ஏற்பட்டது. அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். இந்தச் சம்பவத்துக்கு காரணமான குற்றவாளி 30 வயதான தியோப்ரா ரெட்டன்.

அவர் பல குற்ற வழக்குகளுக்காகவும் நீதிபதி முதலானோரை தாக்கியது உள்ளிட்ட சில புதிய குற்ற வழக்குகளுக்காகவும் கிளார்க் கவுண்ட்ரி தடுப்பு மையத்தில் காவலில் வைக்கப்பட்டிருந்தார்.

முன்னதாக நீதிமன்றத்துக்கு வந்து தனது வழக்கறிஞர் அருகில் நின்று கொண்டிருந்த ரெட்டன் தன்னைப் பற்றி நீதிபதி கேட்டபோது “நல்லதை செய்வதற்காக எதையும் செய்யத் தயங்காத நபர். நான் கலகக்காரன் இல்லை. நான் சிறைக்குச் செல்ல வேண்டியவன் இல்லை என்று நினைக்கிறேன். ஆனால் நீங்கள் அதுதான் சரியென்று நினைத்தால் நீங்கள் விரும்பிதைச் செய்யலாம்” என்றார்.

இதனைத் தொடர்ந்து நீதிபதி ரெட்டனை சிறையில் அடைக்க உத்தரவிடுகிறேன் என்றுக் கூறியதும் குற்றவாளியின் கையில் நீதிமன்ற காவலாளி கைவிலங்கிட நகர்ந்தார். அப்போது ரெட்டன் உடனடியாக நீதிபதியின் மேசை மீது பாய்ந்து தாக்குதலில் ஈடுபட்டார்.

இந்தத் தாக்குதல் சம்பவம் குறித்து ரெட்டனின் வழக்கறிஞர் எந்த பதிலும் சொல்லவில்லை. இந்த நிலையில் நீதிமன்ற செய்தித் தொடர்பாளர் மேரி ஆன் பிரைஸ் கூறுகையில்,

“அனைத்து நடைமுறைகளையும் நான் ஆய்வு செய்து வருகிறேன். எங்கள் நீதிபதிகள், பொதுமக்கள் மற்றும் ஊழியர்களை பாதுகாக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும்” என்று தெரிவித்தார்.

Related News: