சீஷெல்ஸில் இடம்பெற்ற குண்டு வெடிப்பு விபத்தில் வர்த்தகப் பகுதியொன்று தரைமட்டமாகியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த சம்பவத்தில் பலர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த வெடி விபத்தில் யாராவது கொல்லப்பட்டார்களா என்பது பற்றி தெரியவில்லை. அரசாங்கம் அவசரகால நிலையை அறிவித்துள்ளது.
மறு அறிவிப்பு வரும் வரை மக்களை வீட்டிற்குள்ளேயே இருக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த குண்டு வெடிப்பில் 4 கிலோ மீற்றர் தொலைவில் உள்ள சர்வதேச விமான நிலையம் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி அலுவலகத்தின் அறிக்கையின்படி ப்ராவிடன்ஸ் தொழில்துறை பகுதி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் வெடிப்பு பாரிய சேதத்தை ஏற்படுத்தியுள்ளது.
![நாட்டையே உலுக்கிய குண்டு வெடிப்பு: சீஷெல்ஸில் அவசர நிலை பிரகடனம்! | Seychelles As Massive Explosion State Of Emergency நாட்டையே உலுக்கிய குண்டு வெடிப்பு: சீஷெல்ஸில் அவசர நிலை பிரகடனம்! | Seychelles As Massive Explosion State Of Emergency](https://cdn.ibcstack.com/article/2a276c11-2fa7-4d0b-b90d-c23e1075f700/23-657218d2cfbaa.webp)
இதனால் பாடசாலைகள் மூடப்பட்டுள்ளன. அத்துடன் அத்தியாவசிய தொழிலாளர்கள் மட்டுமே வெளியே செல்ல அனுமதிக்கப்படுகிறார்கள்.
பிராவிடன்ஸ் தொழில்துறை பகுதி சீஷெல்ஸ் தீவுக்கூட்டத்தில் உள்ள 115 தீவுகளில் மிகப்பெரிய தீவான மாஹேவில் அமைந்துள்ளது.
உள்ளூர் அறிக்கைகளின்படி, ஒவ்வொரு கட்டிடமும் குறிப்பிடத்தக்க சேதத்தை சந்தித்துள்ளதால் இடிபாடுகள் நிறைந்த பகுதி “போர் மண்டலம்” போன்று காட்சியளிப்பதாக பிராவிடன்ஸில் உள்ள அதிகாரிகள் தெரிவித்தனர்.
பொதுமக்களை காவல்துறையினருக்கு ஒத்துழைத்து வீட்டிலேயே இருக்குமாறு ஜனாதிபதி அலுவலகம் கேட்டுக் கொண்டுள்ளது. சம்பவம் குறித்து அதிகாரிகள் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.