இலங்கை மனித உரிமைகள் மீதான விவாதம்; பிரித்தானிய எம்.பிகளுக்குச் சென்ற இரகசிய கடிதம்

0
191

இலங்கை மனித உரிமைகள் தொடர்பில் பிரித்தானிய பாராளுமன்றில் நேற்று விசேட விவாதம் ஒன்று இடம்பெற்றிருந்த நிலையில், விவாதத்திற்கு முன்னதாக இலங்கை உயர் ஸ்தானிகராலயம் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இரகசிய விளக்க கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இலங்கை தமிழர்களின் மனித உரிமைகள் குறித்து பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர்களின் விசேட விவாதம் வெஸ்ட்மின்ஸ்டர் மண்டபத்தில் நேற்று மாலை இடம்பெறிருந்தது. ஸ்கொட்லாந்து தேசியக் கட்சியின் (SNP) பாராளுமன்ற உறுப்பினர் மார்ட்டின் டே தலைமையில் இந்த விவாதம் இடம்பெற்றிருந்தது.

எவ்வாறாயினும் குறித்த விவாதம் இடம்பெறுவதற்கு முன்னதாக இலங்கை உயர் ஸ்தானிகராலயம் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இரகசிய விளக்க கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது.

அந்தக் கடிதத்தில் “மனித உரிமைகள் மற்றும் நல்லிணக்கத்தைப் பாதுகாப்பதில் உறுதியான முன்னேற்றத்தைத் தொடர்வதில் இலங்கை உறுதியாக இருப்பதாக” தெரிவிக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகின்றது. அத்துடன் மனித உரிமைகள் விடயத்தில் இலங்கை முன்னேறியுள்ளதாகவும் அந்தக் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் இலங்கையின் மனித உரிமைகள் தொடர்பில் பிரித்தானிய பாராளுமன்றில் நேற்று விசேட விவாதம் இடம்பெற்றிருந்தது.

இதில் இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக முன்னெடுக்கப்படும் அடக்குமுறைகள் குறித்து பாராளுமன்ற உறுப்பினர்கள் கடுமையான வாதங்களை முன்வைத்திருந்தனர்.

குறிப்பாக வன்முறை மற்றும் இனப்படுகொலையின் சுழற்சியுடன் துரதிர்ஷ்டவசமாக நடந்து கொண்டிருக்கும் நிகழ்வுகள் இன்னும் உயிர் பிழைத்த தமிழர்களைத் துன்புறுத்துவதாக பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர் மார்ட்டின் டே தெரிவித்திருந்தார்.

இலங்கையில் காணாமல் போனவர்கள் குறித்து தொடங்கப்பட்ட “காணாமல் போனோர்” அலுவலகம் பொது நம்பிக்கையை பெற்றுள்ளதாக குறிப்பிட்டு இந்தக் கடிதம் ஆரம்பிக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகின்றது.

மேலும் “உண்மை மற்றும் நல்லிணக்கப் பொறிமுறை” தொடர்பாக பல ஆலோசனைகளை மேற்கொண்டதாக இலங்கை உயர் ஸ்தானிகராலயம் சார்பில் அனுப்பட்ட கடிதத்தில் கூறப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் இந்த ஆண்டின் தொடக்கத்தில் உண்மை மற்றும் நீதிக்குப் பதிலாக காணாமல் ஆக்கப்பட்ட தங்கள் அன்புக்குரியவர்களுக்கு இழப்பீடு மற்றும் இறப்பு சான்றிதழ்களை ஏற்றுக்கொள்ளுமாறு அழுத்தம் கொடுக்கப்பட்டதாக முல்லைத்தீவு காணாமல் போனவர்களின் குடும்பங்களின் சங்கத்தின் தலைவர் தெரிவித்திருந்தார்.

2022ஆம் ஆண்டு ஐ.நா. உயர்ஸ்தானிகரால் வெளியிடப்பட்ட அறிக்கையில், காணாமல் போனோர் தொடர்பான அலுவலகத்தால் “காணாமல் போன ஒருவரைக் கண்டுபிடிக்கவோ அல்லது காணாமல் போனவர்களின் தலைவிதியை அர்த்தமுள்ள வழிகளில் தெளிவுபடுத்தவோ முடியவில்லை” என்று சுட்டிக்காட்டப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.