திருகோணமலையில் பழைய நெதர்லாந்து கட்டிடத்தை சுற்றுலா அபிவிருத்தி திட்டமாக மாற்ற அனுமதி

0
133

திருகோணமலை நகரில் பழைய டச்சு கட்டிடம் அமைந்துள்ள காணியை சுற்றுலா அபிவிருத்தி திட்டத்திற்காக நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு மாற்றுவதற்கான அனுமதியை பெற்றுக் கொள்வதற்கான அமைச்சரவை பத்திரத்தை நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க சமர்ப்பித்துள்ளார்.

அதன்படி, திருகோணமலை மாவட்டத்தின் ஒரு பகுதிக்கான பெருநகர அபிவிருத்தித் திட்டத்தை ஏற்கனவே நகர அபிவிருத்தி அதிகாரசபை தயாரித்து 1534/8 என்ற விசேட வர்த்தமானி மூலம் வெளியிட்டுள்ளதாகவும் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

வணிக மற்றும் சுற்றுலா நடவடிக்கைகளை விரிவுபடுத்துவதற்கும் மேம்படுத்துவதற்குமான திட்டத்தின் கீழ் உள்ள பகுதி அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.

கிழக்கு மாகாணத்தின் தலைநகரம் திருகோணமலை. நிலாவெளி கடற்கரை, மார்பிள் கடற்கரை, இயற்கை துறைமுகம், பிரடெரிக் கோட்டை மற்றும் நகரத்தில் உள்ள பல தொல்பொருள் இடங்கள் உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் இடங்களாக அமைந்துள்ளன.

திருகோணமலைக்கு வரும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

எனவே நகரின் பொது வசதிகளை மேம்படுத்துவது அவசியம். அதற்காக திருகோணமலை இன்னர் ஹார்பர் வீதியில் அமைந்துள்ள பழைய டச்சு கட்டிடத்தை பயன்படுத்துவதற்கு நகர அபிவிருத்தி அதிகாரசபை திட்டமிட்டுள்ளதாகவும் அது எவ்வித பயன்பாட்டிற்கும் பயன்படுத்தப்படாமல் உள்ளதாகவும் அமைச்சரின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கட்டிடத்தின் புராதனத் தன்மையைப் பாதுகாத்து திருத்தற் பணிகளை மேற்கொள்ளுமாறு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.