நினைவுகூருவதை தடை செய்ய முடியாது; யாழ்ப்பாணம், கோப்பாய் பொலிஸாரின் விண்ணப்பம் நிராகரிப்பு!

0
141

யாழ்ப்பாணம் மற்றும் கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் இன்று (27) இடம்பெறும் மாவீரர் தின நிகழ்வுகளை தடை செய்ய உத்தரவிட கோரி பொலிசார் தாக்கல் செய்த மனு, யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டது.

மற்றும் கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் இடம்பெறும் மாவீரர் தின நிகழ்வுகளை தடை செய்ய உத்தரவிட கோரி, யாழ்ப்பாணம் மற்றும் கோப்பாய் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகளினால் கடந்த சனிக்கிழமை யாழ் நீதவான் நீதிமன்றில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், கோப்பாய் துயிலுமில்லம், நல்லூர் தியாக தீபம் திலீபனின் நினைவிடத்திற்கு முன்பாக அமைக்கப்பட்ட நினைவு மண்டபம் என்பவற்றில் மாவீரர் நாள் நினைவேந்தல் நடைபெறவுள்ள நிலையில் அதற்கு தடை கோரியே பொலிஸாரால் மனு தாக்கல் செய்யப்பட்டது.

அந்த மனு மீதான விசாரணை இன்று திங்கட்கிழமை(27) யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றத்தில் இடம் பெற்றது. இதன்போது மாவீரர் தினத்திற்கு தடை கோரிய பொலிஸின் மனுவை யாழ்ப்பாண நீதவான் ஏ.ஏ.ஆனந்தராஜா நிராகரித்தார்.

அதோடு “இறந்தவர்களை நினைவுகூருவதை தடை செய்ய முடியாது ஆனால் தடை செய்யப்பட்ட அமைப்பை மற்றும்/அல்லது அவர்களை அடையாளப்படுத்தும் கொடி உள்ளிட்ட எதையும் பயன்படுத்த முடியாது” எனவும் உத்தரவிட்டார்.