தமிழ் தேசியம் சார்ந்து ஜனநாயக ரீதியில் மேற்கொள்ளும் செயற்பாடுகளுக்கு ஆதரவு உண்டு

0
143

”தமிழ்த் தேசியம் சார்ந்து ஜனநாயக ரீதியில் முன்னெடுக்கப்படும் அனைத்து செயற்பாடுகளுக்கும் எமது ஆதரவு உண்டு” என யாழ் பல்கலைகழக ஊழியர் சங்கம் தெரிவித்துள்ளது. இது குறித்து யாழ் பல்கலைகழக ஊழியர் சங்கம் அறிக்கையொன்று வெளியிட்டுள்ளது.

குறித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

“யாழ் பல்கலைக்கழக மாணவர்களும் கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்களும் இணைந்து கடந்த ஞாயிறுக்கிழமை மட்டக்களப்பு, மயிலத்தமடு – மாதவனைப் பகுதி மேய்ச்சல் தரை ஆக்கிரமிப்புக்கு எதிராகப் போராடிவரும் கால்நடைப் பண்ணையாளர்களுக்கு ஆதரவாக அமைதியான முறையில் ஜனநாயக ரீதியில் போராட்டத்தினை முன்னெடுத்திருந்தனர்.

குறித்த போராட்டம் எவ்வித குழப்பங்களும் இன்றி யாருக்கும் இடையூறுகளுமின்றி நடைபெற்று நிறைவடைந்த பின்னர் வீடு திரும்பிக் கொண்டிருந்த மாணவர்களை இடைமறித்து அவர்களில் ஆறு மாணவர்களை கைது செய்தனர்.

இது ஒரு திட்டமிட்ட ஜனநாயக விரோதச் செயற்பாடு ஆகும். இச்செயற்பாடு ஜனநாயக ரீதியில் போராடும் மாணவர்களினதும் ஏனையவர்களினதும் செயற்பாடுகளை அச்சுறுத்தும் அரச படைகள் மூலம் அடக்கும் நடவடிக்கையாகவே நாம் பார்க்கின்றோம்.

இதனை நாம் வன்மையாகக் கண்டிப்பதோடு இவ்வாறான செயற்பாடுகளை அரசாங்கம் எதிர்காலத்தில் முன்னெடுக்கக்கூடாது என கோருவதோடு கைது செய்யப்பட்டு வழக்குப் பதியப்பட்ட மாணவர்கள் வழக்குகளிலிருந்து விடுவிக்கப்பட வேண்டும் என்றும் வேண்டி நிற்கின்றோம்.

அதேவேளை பல்கலைக்கழக மாணவர்களாலும் ஏனையோராலும் தமிழ்த் தேசியம் சார்ந்து ஜனநாயக ரீதியில் முன்னெடுக்கப்படும் அனைத்து செயற்பாடுகளுக்கும் எமது ஆதரவு உண்டு என்பதோடு அச்செயற்பாடுகளில் அவர்களுடன் இணைந்து நிற்போம் எனவும் தெரிவித்துக்கொள்கிறோம்” என குறிப்பிடப்பட்டுள்ளது.