தாஜ் சமுத்ரா ஹோட்டலாக கைமாறும் தபால் நிலையம் – நாளை நுவரெலியாவில் பாரிய போராட்டம்

0
312

நுவரெலியாவின் பழமையான தபால் நிலையத்தை இந்தியாவின் தாஜ் சமுத்ரா ஹோட்டலுக்கு கைமாற்றுவதற்கு அராசாங்கம் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு எதிராக நாளை தினம் நண்பகல் 12 மணிக்கு பாரிய போராட்டம் ஒன்று நடத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நுவரெலியா தபால் அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. நுவரெலியா தபால் நிலைய வளாகத்தில் புதிய ஹோட்டல் ஒன்றை அமைப்பதற்கான முயற்சிகள் கடந்த 6 முதல் 7 வருடங்களாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மேலும் தற்போது இவ்வேலை திட்டம் தீவிரமடைந்துள்ளது இதற்கு எதிராக நுவரெலியா நகரில் உள்ள ஏழுக்கும் அதிகமான தொழிற் சங்கங்கள் இணைந்து இவ் போராட்டத்தினை முன்னெடுக்கவுள்ளதாகவும் அதற்கு அனைவரும் இணைந்து ஆதரவினை வழங்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

நுவரெலியா தபால் நிலையத்தை சுற்றுலா நோக்கங்களுக்காக பயன்படுத்துவதற்கான ஜனாதிபதியின் தீர்மானத்திற்கு எதிர்ப்பினை தெரிவித்து விடுமுறைகள் இரத்து செய்யப்பட்டுள்ள நிலையிலும் கடமைகளுக்கு சமுகளிக்காது நுவரெலியா தபால் பணியாளர்கள் அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதன் போது இடம்பெறவுள்ள போராட்டத்திற்கு ஆதரவாக நுவரெலியா நகரத்திலுள்ள அனைத்து வர்த்தக நிலையங்களையும் ( 09) வியாழக்கிழமை நண்பகல் 12 மணி முதல் 2 மணி வரை மூடுவதற்கு நகர வர்த்தக சங்கத்தினர் தீர்மானித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.