ஆசிரியர்களின் போராட்டத்தின் மீது பொலிஸார் தாக்குதல்; மன்னிப்புக் கோரிய சுசில்

0
157

கல்வி அமைச்சுக்கு முன்பாக நடைபெற்ற ஆசிரியர் – அதிபர் ஆர்ப்பாட்டத்தின் மீது பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் தொடர்பில் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த வருத்தம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் கல்வி அமைச்சின் ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள அறிவிப்பில்,

24/10/2023 அன்று பத்தரமுல்லை பெலவத்தை பிரதேசத்தில் ஆசிரியர் – அதிபர் உள்ளிட்ட கல்வித் துறையினர் முன்னெடுத்த போராட்டத்தின் மீது பொலிஸார் நடத்திய தாக்குதல்கள் தொடர்பில் கல்வி அமைச்சு கவலையை வெளிப்படுத்துகிறது.

கல்வி அமைச்சர் கல்வி மாநாடொன்றுக்காக வெளிநாட்டு சென்றிருந்த சந்தர்ப்பத்திலேயே இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இந்த தாக்குதல் சம்பவத்தால் பாதிக்கப்பட்ட அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு கல்வி அமைச்சர் தனது வருத்தத்தையும் இந்த அறிவிப்பின் ஊடாக தெரிவித்துள்ளார்.

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து அதிபர் – ஆசிரியர்கள் நேற்றுமுன்தினம் செவ்வாய்க்கிழமை கல்வி அமைச்சுக்கு முன்பாக பாரிய ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்திருந்தனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தை கலைக்க பொலிஸார் நீர்த்தாரை மற்றும் கண்ணீர் புகை பிரயோகத்தை மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.