18 சதவீதத்தால் அதிகரிக்கப்படவுள்ள மின்கட்டணம்..

0
141

இலங்கை மின்சார சபையினால் உத்தேசிக்கப்பட்டுள்ள மூன்றாவது மின்கட்ட திருத்த யோசனை தொடர்பான பொதுமக்கள் மற்றும் பங்குதாரர்களின் கருத்து கோரல்கள் நேற்று நிறைவடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உத்தேச மின்கட்டண திருத்தம் தொடர்பான தகவல் இலங்கை மின்சார சபையினால் கடந்த மாதம் 28 ஆம் திகதி வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கமைய குறித்த கருத்து கோரல்கள் இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை மின்சார சபையின் பதில் பொதுமுகாமையாளர் உள்ளிட்ட மின்சார சபையின் சிரேஷ்ட அதிகாரிகள், பொது அமைப்புக்களின் செயற்பாட்டாளர்கள், பொதுமக்கள், அரசியல் பிரதிநிதிகள் ஆலோசனை வழங்குவதற்காக நேற்றைய தினம் கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்திற்கு பிரவேசித்திருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மின்கட்டணம் அதிகரிப்பு

மின்கட்டணம் 18 சதவீதத்தால் அதிகரிக்கப்பட வேண்டும் என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

உத்தேச மின்கட்டண திருத்தம் தொடர்பான யோசனைகளை முன்வைக்கும் செயலமர்வில் கலந்து கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துரைத்த இலங்கை மின்சார சபையின் பதில் பொது முகாமையாளர் நரேந்திர சில்வா இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

மின்சாரக் கட்டணத்தை 22 சதவீதத்தால் அதிகரிப்பதற்கு இலங்கை மின்சார சபை சமர்ப்பித்த தரவுகளில் முரண்பாடுகள் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் மின்கட்டணத்தை மீள மதிப்பிடுமாறு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அண்மையில் இலங்கை மின்சார சபைக்கு எழுத்து மூலம் அறிவித்திருந்தது.

இதன்படி இலங்கை மின்சார சபையின் பொது முகாமையாளர் இதற்கான பதில் கடிதத்தை அனுப்பியுள்ளார்.

“எதிர்வரும் இரண்டு வருடங்களுக்கு மின்சார கட்டணத்தை 10 சதவீதத்தால் அதிகரிக்க வேண்டிய தேவை இருப்பதாக” அவர் குறித்த கடிதத்தில் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவுக்கு அறியப்படுத்தியுள்ளார்.