இரத்துச் செய்யப்பட்டுள்ள பயணங்கள்; இஸ்ரேலில் இருக்கும் இரு இலங்கையர்கள் தொடர்பில் கவலைக்குரிய செய்தி..

0
169

இலங்கையில் இருந்து தற்போது இஸ்ரேலுக்கு செல்வதற்கு தயாராகி இருப்பவர்களுடன் கலந்துரையாடி அவர்களின் பயணத்தை தற்காலிகமாக நிறுத்தி இருக்கிறோம் என வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் அமைப்பினருக்கு இடையில் தற்போது உக்கிரமான தாக்குதல் இடம்பெற்று வரும் சூழலில் அங்குள்ள இலங்கையர்களின் பாதுகாப்பு தொடர்பில் கருத்து வெளியிடும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். 

இதேவேளை, இஸ்ரேலில் இருக்கும் இலங்கையர்கள் இருவர் தொடர்பில் கவலைக்குரிய செய்தி கிடைத்திருக்கின்றது என்றும் அமைச்சர் மனுஷ நாணயக்கார சுட்டிக்காட்டினார்.  

தயார் நிலையில் நடவடிக்கைகள் 

தொடர்ந்தும் தெரிவிக்கையில், 

இஸ்ரேலில் இடம்பெற்றுவரும் மோதல் நிலை தொடர்பாக நாங்கள் எமது கவலையை தெரிவிக்கிறோம். அங்குள்ள எமது தொழிலாளர்களின் பாதுகாப்பு தொடர்பாக தகவல்களை பெற்றுக்கொள்ள வட்ஸ்அப் இலக்கம் ஒன்றை அறிமுகப்படுத்தி இருக்கிறோம்.

அங்குள்ள எமது தூதரகம் திறந்தே இருக்கிறது. அதனால் எந்த சந்தர்ப்பத்திலும் அங்கு செல்ல முடியும். அத்துடன் இஸ்ரேலுக்கு தொழில் நிமித்தம் சென்றவர்கள் மீண்டும் நாட்டுக்கு திரும்புவதாக இருந்தால் அதற்காகவும் தேவையான நடவடிக்கைகளை தயார் படுத்தி இருக்கிறோம்.

இஸ்ரேல் விமான நிலையத்துக்கு அண்மித்த பகுதிகளில் பிரச்சினைகள் இல்லை. அதனால் யாருக்கு வேண்டுமானாலும் நாட்டுக்கு திரும்ப சந்தர்ப்பம் இருக்கிறது. அதேபோன்று தற்போது இஸ்ரேலுக்கு செல்வதற்கு தயாராகி இருப்பவர்களுடன் கலந்துரையாடி அவர்களின் பயணத்தை தற்காலிகமாக நிறுத்தி இருக்கிறோம்.

வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் வெளிவிவகார அமைச்சு இஸ்ரேல் தூதுதரகம் மற்றும் இஸ்ரேலின் பீபா நிறுனம் ஆகிய 4 நிறுவனங்களும் ஒன்றிணைந்து இது தொடர்பான நடவடிக்கைகளை ஒருங்கிணைத்து வருகிறோம்.

எமது நாட்டைச் சேர்ந்த 2 பேர் தொடர்பாக கவலைக்குரிய தகவல் கிடைத்து வருகிறது. அவர்களின் குடும்பங்களுக்கு எமது அனுதாபத்தை தெரிவித்துக்கொள்கிறோம்.

உறுதிப்படுத்த முடியாத தகவல்கள்

தற்போது இஸ்ரேலில் இருக்கும் இலங்கையர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக நாங்கள் இஸ்ரேல் அரச அதிகாரிகளுடன் கலந்துரையாடி வருகிறோம். வெளிவிவகார அமைச்சும் அதற்காக எமக்கு பூரண ஒத்துழைப்பை வழங்கி வருகிறது.

இஸ்ரேலில் இருக்கும் இரு இலங்கையர்கள் தொடர்பில் கவலைக்குரிய செய்தி : இரத்துச் செய்யப்பட்டுள்ள பயணங்கள் | Israel Palestine War Update Sri Lankans

யுத்த நிலைமைக்குள் கிடைக்கப்பெறும் தகவல்கள் என்றபடியால், எமக்கு கிடைக்கும் தகவல்களை முறையாக எங்களுக்கு உறுதிப்படுத்திக்கொள்ள முடியாமல் இருக்கிறது.

அந்த தகவல்களை உறுதிப்படுத்தி எங்களுக்கு தகவல் வழங்க முடியுமான நிலை இல்லை. அத்துடன் இஸ்ரேலில் இருக்கும் இலங்கையர்களின் பாதுகாப்பு தொடர்பாக நாங்கள் இரண்டு அரசாங்கங்களும் ஒன்றிணைந்து நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

அனைவரையும் பாதுகாப்பான இடமொன்றுக்கு ஒன்றுசேர்க்க செஞ்சிலுவை சங்கத்துடன் நாங்கள் கலந்துரையாடினோம். இஸ்ரேலில் இருந்து எமக்கு கிடைக்கும் தகவல்களின் பிரகாரம் தற்போது அங்கு அச்சப்படக்கூடிய நிலை இல்லை என்றே தெரிவிக்கப்படுகிறது. எம்மவர்களின் பாதுகாப்பு தொடர்பாக அவர்கள் உறுதியளித்துள்ளனர் என்றார்.