நடிகர் விஷால், தனது ‘விஷால் பிலிம் பேக்டரி’ நிறுவனத்திற்காக சினிமா பைனான்சியர் அன்புச்செழியனின் கோபுரம் பிலிம்ஸ் நிறுவனத்திடம் பெற்ற 21 கோடியே 29 லட்சம் ரூபாய் கடனை, லைகா நிறுவனம் ஏற்றுக் கொண்டு செலுத்தியது.
அந்த பணத்தை முழுவதும் திருப்பி செலுத்தும் வரை, விஷால் பட நிறுவனத்தின் அனைத்து படங்களின் உரிமைகளும் லைகா நிறுவனத்துக்கு வழங்க வேண்டும் என்ற ஒப்பந்தம் போடப்பட்டது.
அதை மீறி வீரமே வாகை சூடும் என்ற படத்தை வெளியிட்டதாக விஷால் நிறுவனத்திற்கு எதிராக லைகா நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு கடந்த 12-ம் திகதி விசாரணைக்கு வந்தபோது, நடிகர் விஷால் நேரில் ஆஜராகியிருந்தார்.
அப்போது, 2021-ம் ஆண்டு ஜனவரி முதல் இது வரைக்குமான வங்கிக் கணக்கு விவரங்கள், விஷாலுக்குச் சொந்தமான அசையும், அசையா சொத்து விவரங்கள், அவை எப்போது வாங்கப்பட்டன என்பது தொடர்பான ஆவணங்கள் ஆகியவற்றைத் தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டிருந்து.
உத்தரவை மதிக்காமல் விஷால் ஆவணங்களைத் தாக்கல் செய்யாமல் இருந்த நிலையில் அவரை நீதிமன்றம் எச்சரித்தது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, விஷால் தரப்பில் சொத்து, வங்கி கணக்கு விவரங்கள் தாக்கல் செய்யப்பட்டன. தொடர்ந்து வழக்கு விசாரணை 29ஆம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.