ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் புதிய விசாரணைகளை கோரிய அமெரிக்கா – மறுத்த இலங்கை

0
208

இலங்கையில் நடந்த ஈஸ்டர் ஞாயிறு தொடர் குண்டு தாக்குதல் சம்பந்தமான புதிய விசாரணைகளை நடத்துமாறு அமெரிக்காவின் எஃப்.பி.ஐ. நிறுவனம் இலங்கை அரசாங்கத்திடம் கோரியுள்ளது.

எனினும் இதற்கு முன்னர் இந்த தாக்குதல் சம்பந்தமாக விசாரணைகள் நடத்தப்பட்டுள்ளதால், மீண்டும் அப்படியான விசாரணை நடத்த தேவையில்லை என இலங்கை அரசாங்கம், எஃப்.பி.ஐ நிறுவனத்திற்கு அறிவித்துள்ளதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்றி தெரிவித்துள்ளார்.

ஈஸ்டர் தாக்குதல் சம்பந்தமான ஜனாதிபதி ஆணைக்குழு மற்றும் பாராளுமன்ற தெரிவுக்குழு ஆகியவற்றின் மூலம் உரிய விசாரணைகள் நடத்தப்பட்டுள்ளதால், மீண்டும் விசாரணைகளை நடத்தும் தேவையில்லை என்பது அரசாங்கத்தின் நிலைப்பாடு எனவும் அவர் கூறியுள்ளார்.

ஈஸ்டர் தாக்குதல் நடந்த பின்னர், அவுஸ்திரேலியாவின் சமஷ்டி பொலிஸார், அமெரிக்காவின் எஃப்.பி.ஐ , இன்டர்போல் ஆகியன இணைந்து விசாரணைகளை நடத்தியதாகவும் விசாரணைகள் தொடர்பான தகவல்கள் சட்டமா அதிபருக்கு வழங்கப்பட்ட பின்னர், அவற்றை அடிப்படையாக கொண்டு பலருக்கு எதிராக வழக்குகள் தொடரப்பட்டுள்ளதாகவும் அலி சப்றி குறிப்பிட்டுள்ளார்.