எதிர்க்கட்சி தலைவரை கொலை செய்ய எவரும் முயற்சிக்க மாட்டார்கள் – பாலித ரங்கே பண்டார

0
192

எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவை கொலை செய்ய எவரும் முயற்சிக்க மாட்டார்கள் என ஐக்கிய தேசியக்கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார தெரிவித்துள்ளார்.

தனக்கு கொலை அச்சுறுத்தல் இருப்பதாக எதிர்க்கட்சி தலைவர் தெரிவித்திருந்தமைக்கு பதிலளிக்கும் வகையில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் ரங்கே பண்டார இதனை குறிப்பிட்டுள்ளார்.

எதிர்க்கட்சி தலைவரை கொலை செய்ய எவரும் முயற்சிக்கவில்லை. நாங்கள் மாட்டிறைச்சியை சாப்பிடுவதில்லை. எதிர்க்கட்சி தலைவர் அடுத்த ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதில்லை என தீர்மானித்துள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் முஸ்லிம் பிரதிநிதி ஒருவர் என்னிடம் கூறினார்.

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட போவதாக சஜித் பிரேமதாச பகிரங்கமாக பொய் கூறுகிறார். அதேபோல் சஜித் பிரேமதாச கடந்த காலங்களில் நடந்துக்கொண்ட விதத்தை நாங்கள் அனுபவத்தில் கண்டுள்ளோம்.

ஒரு முறை கரு ஜயசூரியவை ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவர் பதவிக்கு பரிந்துரைத்தார். அதன் பின்னர் டலஸ் அழகப்பெருமவை ஜனாதிபதிக்கான போட்டியில் நிறுத்தினார் எனவும் பாலித ரங்கே பண்டார மேலும் தெரிவித்துள்ளார்.