இந்தியாவின் நம்பர் 1 கோடீஸ்வரராக இருப்பவர் முகேஷ் அம்பானி. போர்ப்ஸ் பத்திரிக்கையின் தகவலின்படி உலக பணக்காரர்கள் வரிசையில் முகேஷ் அம்பானி 13வது இடத்தில் உள்ளார். அவரின் சொத்து மதிப்பு $94.7 பில்லியன் ஆகும்.
முகேஷின் தனிப்பட்ட வாழ்க்கை என எடுத்து கொண்டால் கடந்த 1985 ஆம் ஆண்டு நீடா என்ற பெண்ணுடன் அவருக்கு திருமணம் நடைபெற்றது.
சாதாரண நடுத்தர குடும்பத்தில் பிறந்த நீடா மிகச்சிறந்த நாட்டியக் கலைஞர். மும்பையில் ஒரு நவராத்திரி விழாவின்போது நீடாவின் நடனத்தைக் கண்டு பிரமித்துப் போனார் முகேஷின் தந்தை திருபாய் அம்பானி.
தன் மகன் முகேஷுக்கு பொருத்தமாக இருப்பார் என்று நீடா குறித்து மனதுக்குள் எண்ணிக் கொண்டார். நீடாவை அழைத்த திருபாய் நாளை என்னை அலுவலகத்தில் வந்து சந்திக்க முடியுமா என்றார். அதற்கு சரி என கூறிய நீடா, திருபாயை அலுவலகத்தில் சென்று சந்தித்தார்.
முதலில், நீடாவின் பொழுதுபோக்கு அவருக்குப் பிடித்த விஷயங்கள் குறித்து கேட்டறிந்து கொண்ட திருபாய் அம்பானி நேரடியாக விஷயத்துக்கு வந்தார். ‘என் மூத்த மகன் குறித்து உங்களுடன் பேச வேண்டும். அவனை சந்திக்க உங்களுக்கு விருப்பமா என்று கேட்டார்.
அதிலென்ன இருக்கிறது!’ என்று முகேஷை அவரின் வீட்டில் போய் சந்தித்தார் நீடா. தொடர்ந்து பலமுறை சந்திப்பு நடந்தது. முகேஷ் அம்பானியின் சொகுசு வாழ்க்கையை சோதனைக்குட்படுத்தியுள்ளார் நீடா.
அதற்காக அவரை மும்பை நகரின் பல்வேறு பகுதிகளுக்கு பேருந்தில் அழைத்துச் சென்றிருக்கிறார். சாலையோர கடைகளில் உணவருந்த வைத்திருக்கிறார். அங்கெல்லாம் தான் இருவருக்குமான பிணைப்பு அதிகரித்துள்ளது.
ஒருநாள் காரில் செல்லும்போது திருமணம் செய்து கொள்ளலாமா என முகேஷ் அம்பானி கேட்டார். நீடா எதுவும் சொல்லாமல் மௌனம் காக்கவே பதில் சொன்னால் தான் வண்டியை எடுப்பேன் என்று முகேஷ் கூறினார். பின்னர் நீடா ஒப்புக் கொள்ள இருமனம் ஒருமனம் ஆனது..!