மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரிக்கு நிரந்தர அதிபர் நியமனம்..

0
161

மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லுாரிக்கான நிரந்தர அதிபர் நியமனமானது இலங்கை கல்வி நிருவாக சேவையை சேர்ந்த அன்ரன் பெனடிக் ஜோசப்க்கு வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

இசுறுபாயவில் அமைந்துள்ள கல்வி அமைச்சில் நேற்று (15.08.2023) குறித்த நியமனம் வழங்கிவைக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்னர் கல்லுாரி அதிபராக கடமையாற்றியிருந்த பயஸ் ஆனந்தராஜா கடந்த வருடம் (2022) டிசம்பர் 30 ஆம் திகதி தனது சேவையில் இருந்து ஒய்வு பெற்றிருந்த நிலையில், மட்டக்களப்பு வலயக் கல்வி அலுவலக உதவி கல்விப் பணிப்பாளர் ஜோன் பிரபாகரன் தற்காலிக அதிபராக நியமிக்கப்பட்டடிருந்தார்.

அதிபர் நியமனம்

இதேவேளை கல்வி அமைச்சினால் கடந்த மே மாதம் 30 ஆம் திகதியன்று இலங்கையில் உள்ள 17 தேசிய பாடசாலை அதிபர் வெற்றிடங்களுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டு ஜூலை 21 ஆம் திகதி நேர்முகப்ரீட்சை இடம்பெற்றதுடன் பொதுச்சேவை ஆணைக்குழுவின் முறையான அனுமதியுடன் குறித்த நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

பேராதனை பல்கலைக்கழக பட்டதாரியான அன்ரன் பெனடிக் ஜோசப் இலங்கை கல்வி நிருவாக சேவையில் 2016 ஆம் இணைந்து கொண்டார்.

இவர் தனது பாடசாலை, பல்கலைக்கழக காலங்களில் சிறந்த கால்பந்து வீரராக திகழ்ந்ததுடன் மும்மொழிச் தேர்ச்சி பெற்றுள்ளதாகவும், பட்டப்படிப்பின் பின்னர் பல்வேறு சர்வதேச தொண்டு நிறுவனங்களின் நிருவாக துறையில் கடமையாற்றியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

மேலும் கல்வி நிருவாக சேவை நியமனத்தில் முதன்மை நிருவாகியாக தெரிவு செய்யப்பட்டார் என்பதோடு, தற்போது வடமத்திய மாகாண அனுராதபுரம் கல்வி வலயத்திற்கான நிருவாக பணிப்பாளராக கடமையாற்றியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.