பொதுமக்களை வன்முறையாளர்களாக்கி ஆட்சி கவிழ்ப்பு சதியில் ஜே.வி.பி தலைமையிலான குழு ஈடுபட்டு வருவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க குற்றஞ்சாட்டியுள்ளார்.
அண்மையில் நடைபெற்ற ஆளும் கட்சி கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் மேலும் அவர் தெரிவித்துள்ளதாவது, நாட்டில் ஏற்பட்டுள்ள வறட்சியை அடிப்படையாகக் கொண்டு, ஜே.வி.பி கட்சியும் பிரபல ஊடகம் ஒன்றும் வன்முறைகள் ஊடாக ஆட்சி கவிழ்ப்பு சதியை முன்னெடுத்து வருகின்றது.
ஆட்சி கவிழ்ப்பு சதி
கடந்த ஆண்டை போன்று மக்களை வன்முறையாளர்களாக்கி வீதியில் இறக்கி, அரச எதிர்ப்பு போராட்டங்களை முன்னெடுக்க முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்த வன்முறை போராட்டங்களின் இறுதி இலக்கு ஆட்சி கவிழ்ப்பு சதியாகும்.
இந்த சதித்திட்டத்திற்கான ஆதாரங்கள் கிடைக்கப்பெற்றுள்ளதுடன், புலனாய்வு அறிக்கைகளும் உறுதிப்படுத்தியுள்ளன. மீண்டும் நாட்டை வன்முறைக்குள் கொண்டு செல்ல இடமளிக்க முடியாது.
எனவே ஜே.வி.பியின் ஆட்சி கவிழ்ப்பு சதி குறித்து கவனத்தில் கொள்ள விசேட நாடாளுமன்ற தெரிவுக்குழுவை எதிர்வரும் நாட்களில் நியமிக்க உள்ளேன். பாதுகாப்பு தரப்புகளுக்கும் உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இனப்பிரச்சினைக்குத் தீர்வு
கடுமையான பொருளாதார நெருக்கடிகளிலிருந்து நாடு தற்போது ஒரு சுமுகமான நிலைக்கு வந்துள்ளது. பொருளாதார மறுசீரமைப்புகள் சிறப்பாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
அதற்கு மக்களின் முழுமையான ஒத்துழைப்புகளும் கிடைத்துள்ளன. பல்வேறு மக்களின் நலம் சார்ந்த திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
தேசிய இனப்பிரச்சினைக்குத் தீர்வு கண்டு, அனைத்து வழிகளிலும் நாட்டை முன்னோக்கிக் கொண்டு செல்ல முயற்சிகளை முன்னெடுத்துள்ளேன்.
இவற்றைச் சீரழித்தும் நாட்டின் அமைதியை சீர்குழைக்கவுமே முயற்சிகள் முன்னெடுக்கப்படுவதாக ஜனாதிபதி இதன்போது குறிப்பிட்டுள்ளார்.