திருகோணமலையில் தமிழ் பேசும் வேடுவர்கள் புறக்கணிக்கப்பட்ட நிலையில் இருப்பதாக தெரியவந்துள்ளது.
திருகோணமலை மாவட்டத்தில் 3500 இற்கும் மேற்பட்ட தமிழ் பேசும் வேடுவர் குடும்பங்கள் உள்ளதாக குவேனி வேடுவர் அமைப்பின் செயலாளர் வரதன் கூறுகிறார்.
கி.மு ஐந்தாம் நூற்றாண்டில் இந்தியாவிலிருந்து இலங்கைக்கு வந்த விஜயன் என்ற மன்னன் குவேனி என்ற இயக்கர் குலத்து பெண்ணை திருமணம் செய்ததாக மகாவம்சம் கூறுகிறது. இந்த நிலையில் விஜயன், குவேனியின் வழித்தோன்றல்களே தாங்கள் என்று வரதன் கூறுகின்றார்.
ஒதுக்கப்பட்ட சமூகமாக உள்ள வேடுவர்கள்
இவர்களின் பிறப்புச் சான்றிதழிலில் சாதி எனும் பகுதியில் வேடர் என குறிப்பிடப்பட்டுள்ளது. எனினும் வேடுவர்கள் இன்னும் ஒதுக்கப்பட்ட சமூகமாகவே உள்ளனர் என குவேனி வேடுவர் அமைப்பின் பொருளாளரான சாலையூரைச் சேர்ந்த சிறிசெல்வம் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் குறித்த மக்கள் கூறுகையில், “எமக்கான ஒரு அடையாளத்தை வழங்க வேண்டும். எம்மால் காட்டில் விறகுகளை வெட்டவோ தேன் எடுக்கவோ செல்ல முடிவதில்லை. எங்களால் தான் காடுகள் அழிக்கப்படுவதாக குற்றம்சாட்டுகிறார்கள்.
மரப்பொந்துகளில் இருந்து தான் தேன் எடுக்கின்றோம். எனினும் எங்களை விரட்டுகிறார்கள். அத்துடன் எங்களுடைய கோடரி உள்ளிட்ட ஆயுதங்களையும் பறித்துக் கொள்கிறார்கள்” என கவலை தெரிவித்துள்ளனர்.