”இக்காலப்பகுதியிலும் மழை கிடைக்காவிட்டால் வடக்கு மாகாணத்தின் பல பகுதிகளுக்கும் மிக மோசமான வரட்சி ஏற்படலாம்” என யாழ் பல்கலைக்கழக புவியியற் துறையின் சிரேஷ்ட விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார்.
நேற்று (08) இரவு வெளியிட்ட அறிக்கையிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
அவ் அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களாக
வெப்பநிலை உயர்வு
”எல்நினோ தாக்கத்தின் காரணமாக இலங்கை முழுவதும் வெப்பமான வானிலை நிலவுகின்றது. நாட்டின் பல பகுதிகளுக்கும் தற்போது பகலில் வெப்பநிலை உயர்வாக காணப்படுகின்றது.
பல மேற்பரப்பு நீர் நிலைகளின் ஆவியாக்க அளவு மாத சராசரியை விட 26% உயர்வாக காணப்படுகின்றது. இதனால் பல குளங்களில் நீர் மட்டம் சடுதியாக குறைவடைந்து வருகின்றது. பல பிரதேசங்களில் நீர்ப்பற்றாக்குறை நிலவும் சூழ்நிலை காணப்படுகின்றது.
இந்நிலையில் வெப்பச்சலனம் காரணமாக அடுத்த 04 நாட்களில் நாட்டின் பல பகுதிகளில் மிதமான மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது. ஆனாலும் இம்மழை தற்போது நிலவும் வெப்பமான வானிலை காரணமாக ஏற்பட்டுள்ள பாதிப்புக்களை குறைப்பதற்கு போதுமானதல்ல. எனினும் மழை கிடைத்தால் அது ஒரு சில நாட்களுக்காவது சௌகரியமான வானிலை நிலைமையை உருவாக்கும்.
நீர்ப் பற்றாக்குறை
தற்போதைய நிலையில் முகில்களின் நிலைமையைப் பொறுத்தவரை மழை கிடைப்பதற்கான வாய்ப்புக்களே காணப்படுகின்றன. எனினும் வெப்பச்சலன( Convective Process) செயற்பாடுகளில் மாற்றம் ஏற்பட்டால் மழைக்கான வாய்ப்புகள் இல்லாமலும் போகலாம்.
ஆண்டுதோறும் வடக்கு மாகாணம் இக்காலப்பகுதியிலேயே அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஆவியாக்கம் காரணமாக மிகப்பெரிய அளவிலான நீர் பற்றாக்குறையை எதிர்கொள்கின்றது.
எனவே வடக்கு மாகாணத்தின் நீர்ப்பற்றாக்குறையை தீர்ப்பதற்கான வழிமுறைகளைப் பற்றி ஆராயும் போது இக்காலப்பகுதியிலும் நீர் கிடைக்ககூடிய நீர்மூலம்(Water source) ஒன்றையே கருத்தில் கொள்ள வேண்டும்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.