இந்தியாவில் கிரேன் விழுந்து 17 பேர் பலி: சாலை அமைக்கும் பணியின் போது சோகம்

0
188

இந்தியாவில் அதிவேக வீதி அமைக்கும் பணியின்போது கிரேன் இயந்திரம் விழுந்து 17 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று (01.08.2023) அதிகாலை இடம்பெற்றுள்ளது.

மும்பை – மராட்டிய மாநிலத்தில் மும்பை – நாக்பூரை இணைக்கும் சம்ருதி அதிவேக வீதி அமைக்கப்பட்டு வருகிறது.

இந்த வீதியின் 3ஆம் கட்டப்பணிகள் தானே மாவட்டத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தானே மாவட்டத்தின் ஷகல்பூர் தாலுகா சர்லம்பி கிராமத்தில் வீதி அமைப்பதற்கான மேம்பாலம் கட்டும்பணிகள் இன்று அதிகாலை நடைபெற்று வந்துள்ளன.

தொடரும் மீட்புப்பணிகள்

மேம்பாலத்தின் பாகங்களை தூக்கி வைக்க இராட்சத கிரேன் இயந்திரம் பயன்படுத்தப்பட்டுள்ளது. தொழிலாளர்கள் இன்று அதிகாலை வேலை செய்து கொண்டிருந்தபோது கிரேன் இயந்திரம் திடீரென சரிந்து விழுந்துள்ளது. விபத்துக்குள்ளானது.

இந்த சம்பவத்தில் 17 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர். மேலும் 3 பேர் படுகாயமடைந்துள்ளனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற பொலிஸார் படுகாயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

விபத்து நடந்த பகுதியில் இடிபாடுகளுக்குள் மேலும் சிலர் சிக்கி இருக்கலாம் என்பதால் மீட்புப்பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக இந்திய ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. மேலும் இந்த விபத்துக்கான காரணம் குறித்தும் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறதாவும் குறிப்பிடப்படுகின்றது.