அமெரிக்காவில் புல் வெட்டும் இயந்திரம் 27 வயதுடைய தாயின் மீது ஏறிச் சென்றதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
தாய்க்கு நேர்ந்த பரிதாபம்
அமெரிக்காவின், கலிபோர்னியாவில், மொடெஸ்டோ பகுதியில் உள்ள பியர்ட் புரூக் பூங்காவில்(Beard Brook Park) களைச்செடிகள் மற்றும் புற்கள் அதிகமாக வளர்ந்து இருந்த இடத்தில் 27 வயதுடைய கிறிஸ்டின் சாவேஸ்(Christine Chavez) என்ற பெண் படுத்து ஓய்வு எடுத்துக் கொண்டிருந்தார்.
அப்போது பூங்கா நிர்வாகத்தால் பணியமர்த்தப்பட்டு இருந்த தொழிலாளி ஒருவர், புற்களை சீர்திருத்துவதற்காக புல் வெட்டும் கருவியை டிராக்டருடன் இணைத்து அப்பகுதியில் வேலையை தொடங்கியுள்ளார்.
புற்கள் உயரமாக வளர்ந்து இருந்ததால் கிறிஸ்டின் சாவேஸ் படுத்து இருந்தது தெரியாமல் அவர் மீது புல் வெட்டும் இயந்திரத்தை அந்த தொழிலாளி ஓட்டிச் சென்றுள்ளார்.
ஜூலை 8ம் திகதி நடைபெற்ற இந்த சம்பவத்தில் 27 வயதுடைய தாய் கிறிஸ்டின் சாவேஸ் துண்டுதுண்டாக வெட்டப்பட்டு அந்த இடத்திலேயே உயிரிழந்து விட்டார்.
பூங்கா நிர்வாகத்தால் ஜூலை 7ம் திகதி ஒப்பந்த அடிப்படையில் காலோ என்ற நபர் புற்களை சீர் திருத்துவதற்காக பணியமர்த்தப்பட்டுள்ளார். டிராக்டர் கிறிஸ்டின் சாவேஸ்-ஐ கடந்த பிறகே தொழிலாளி காலோ நடந்த விபத்தை உணர்ந்துள்ளார்.
இதையடுத்து உடனடியாக ஒப்பந்த நிறுவனம் பொலிஸாருக்கு தகவல் கொடுக்கவே சம்பவ இடத்திற்கு அவர்கள் விரைந்து வந்தனர். இதற்கிடையில் தொழிலாளி காலோ பாதிக்கப்பட்டவரின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.
வேதனையில் குடும்பம்
இந்நிலையில் சம்பவம் நடைபெற்ற இடத்தை பார்வையிட்ட கிறிஸ்டின் சாவேஸ் உறவினர்கள் மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளாகினர்.
கிறிஸ்டின் சாவேஸின் தந்தை கிறிஸ்டோபர் சாவேஸ், சம்பவ இடத்தில் சில உடல் பாகங்கள் சிதறி கிடப்பதையும், கிறிஸ்டினின் ஆடைகள் கிடப்பதையும் மட்டுமே பார்த்ததாகவும், இது மிகவும் கொடூரமாக இருந்தது என்று வேதனையுடன் தெரிவித்துள்ளார்.
கிறிஸ்டின் சாவேஸ் வீடற்ற நிலையில் இருந்து வந்ததுடன், அவரது குடும்பத்தினரால் அவருடைய 9 வயது குழந்தை பாராமரிக்கப்பட்டு வந்ததாக தெரியவந்துள்ளது.
புற்கள் உயரமாக வளர்ந்து இருந்ததே இந்த விபத்துக்கு காரணம் என்று பூங்கா நிர்வாகமும், ஒப்பந்த நிர்வாகமும் தெரிவித்துள்ளது, மேலும் இந்த விபத்துக்கு தொழிலாளி காலோ பொறுப்பாக மாட்டார் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.
அத்துடன் பொலிஸாரின் விசாரணைக்கு தொழிலாளி காலோவும், ஒப்பந்த நிர்வாகமும் முழு ஒத்துழைப்பு வழங்கும் என தெரிவித்துள்ளது.