ஜேர்மனிக்கு சுற்றுலா வந்த அமெரிக்க இளம்பெண்கள் இருவர் தாக்கப்பட்ட நிலையில், ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இளம்பெண் மீது திடீர் தாக்குதல்
ஜேர்மனியில் உள்ள புகழ் பெற்ற மாளிகை ஒன்றைக் காண்பதற்காக 21 மற்றும் 22 வயதுடைய இரண்டு அமெரிக்க இளம்பெண்கள் சென்றுள்ளார்கள்.
அப்போது அவர்கள் அங்கு 30 வயதுடைய மற்றொரு அமெரிக்கரை சந்தித்துள்ளார்கள். மூவருமாக, Schwangau என்னுமிடத்திலுள்ள அந்த மாளிகையைக் காண்பதற்காக Marienbrücke என்னும் பாலம் வழியாக சென்றுள்ளார்கள்.
என்ன நடந்ததோ தெரியவில்லை, அந்த ஆண், அந்த 21 வயது இளம்பெண்ணைத் தாக்கியுள்ளார். தடுக்கச் சென்ற அந்த 22 வயது இளம்பெண்ணை அவர் கீழே தள்ள, அந்த பெண் பள்ளத்தில் விழுந்திருக்கிறார்.
துஷ்பிரயோக முயற்சி
பின்னர் அந்த 21 வயது பெண்ணை பாலியல் துஷ்பிரயோகம் செய்ய முயன்றுள்ளார் அந்த நபர். பின்னர் அந்தப் பெண்ணையும் 160 அடி பள்ளத்தில் தள்ளிவிட்டு அங்கிருந்து தப்பியோடியுள்ளார் அவர்.
தகவலறிந்து அங்கு விரைந்த பொலிசார் அந்தப் பெண்களை மீட்டு ஹெலிகொப்டர் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பிவைத்துள்ளனர்.
ஆனால், அந்த 21 வயது இளம்பெண் காயங்கள் காரணமாக உயிரிழந்துவிட்டாராம். அந்த 22 வயது இளம்பெண் பலத்த காயங்களுடன் தொடர்ந்து சிகிச்சை பெற்றுவருகிறார்.
இந்த பயங்கர சம்பவம் தொடர்பாக அந்த 30 வயது அமெரிக்கரை பொலிசார் கைது செய்து விசாரித்துவருகிறார்கள்.