மக்கள் சார்ந்து கதைக்கின்ற நாடாளுமன்ற உறுப்பினர்களை முடிந்தால் கைது செய்யுங்கள் பார்க்கலாம் என வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் முன்னாள் அமைச்சர் சரத்வீரசேகரவிற்கு சவால் விடுத்துள்ளார்.
வவுனியா மாவட்ட எல்லை மீள் நிர்ணயம் தொடர்பான கலந்துரையாடல் ஒன்று மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இன்றைய தினம் (16.06.2023) நடைபெற்றது.
குறித்த கூட்டத்திற்குப் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்து தெரிவிக்கையிலே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
மக்களுடைய பிரச்சினை
மேலும் அவர் தெரிவித்துள்ளதாவது, முன்னாள் அமைச்சர் சரத்வீரசேகர அவர்கள் கடந்த காலங்களிலே பல கருத்துக்களைக் கூறி வருகிறார்.
குறிப்பாகத் தமிழ் பிரதேசங்களிலே நடைபெறுகின்ற அடக்கு முறைக்கு எதிராகக் குரல் கொடுக்கின்ற நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என்றும், மாகாண சபை முறையையும் இல்லாது ஒழிக்க வேண்டும் என்றும் அவருடைய கோரிக்கை இருந்தது.
சரத் வீரசேகர அவர்கள் இராணுவத்தில் ரொட்டி சுட்டார் போல் தெரிகிறது. ஏனென்றால் மக்களுடைய பிரச்சினை என்பது காலகாலமாக இருந்து வருகின்ற பிரச்சினை.
நான் சவால் விடுகிறேன்
நாடாளுமன்றத்திற்கு மக்கள் அனுப்புவது மக்களுடைய பிரச்சினைகளைப் பேசுவதற்கும், தங்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளுகளை தட்டி கேட்பதற்குமே நாடாளுமன்ற உறுப்பினர்களை அனுப்புவது மக்களுடைய முறைமையாக இருக்கிறது.
ஆகவே நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களுடைய தேசத்திலே இருக்கின்ற மக்களுடைய பிரச்சினைகளைக் கதைக்கின்ற நிலையிலே இவர் யார்? இவருக்கு என்ன யோக்கியம் இருக்கிறது? தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என்று.
முடிந்தால் அதைச் செய்து பார்க்கட்டும். அவருக்கு நான் சவால் விடுகிறேன். இந்த மக்கள் சார்ந்து கதைக்கின்ற நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கைது செய்யுங்கள் பார்க்கலாம். அடுத்தது என்ன நடக்கும் என மேலும் தெரிவித்துள்ளார்.
இதன்போது வவுனியா மாவட்டத்தில் உள்ள மக்கள் நிர்வாக நடவடிக்கைகளை இலகுவாக மேற்கொள்ளும் பொருட்டு வவுனியா பிரதேச செயலக பிரிவில் பட்டாணிச்சூர், வேப்பங்குளம், பண்டாரிக்குளம், கூமாங்குளம், உக்குளாங்குளம், மகாறம்பைக்குளம் என்பனவும் செட்டிகுளம் பிரதேச செயலக பிரிவில் மெனிக்பாம், ஆண்டியாபுளியங்குளம் என்பனவும் தனி கிராம அலுவர் பிரிவுகளாக பிரிப்பதற்கும், கலாபோகஸ்வேவ உள்ளிட்ட 4 சிங்கள குடியேற்ற கிராமங்களின் நிர்வாக நடவடிக்கையை வவுனியா வடக்கு பிரதேச செயலகத்துடன் இணைப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.