பிரான்சில் நடந்த கத்திக்குத்து தாக்குதலில் குழந்தைகள் உட்பட 6 பேர் காயமடைந்ததாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
தென்கிழக்கு பிரான்சில் உள்ள அன்னேசியில் நேற்று (08.06.2023) காலை பூங்காவில் வைத்து இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
குழந்தைகள் உட்பட 6 பேரை கத்தியால் குத்திய நபர் தப்பி ஓடுவதை காட்டும் காணொளி ஒன்று சமூக ஊடகங்களில் தற்போது வெளிவந்துள்ளது.
விரைந்து செயற்பட்ட பொலிஸார்
ஆறு வினாடிகள் கொண்ட குறித்த காணொளியில், கருப்பு நிற மேற்சட்டை, ஸ்வெட்ஷர்ட் மற்றும் தொப்பி அணிந்த நபர் ஒரு பூங்காவில் ஓடுவதையும், உள்ளூர்வாசிகள் அவரை துரத்துவதையும் காட்டுகிறது. பின்னணியில் சில அலறல்கள் கேட்கின்றன.
சிறிது நேரத்தில் சம்பவ இடத்தில் அவரை பொலிஸார் மடக்கிப்பிடித்து கைது செய்துள்ளனர்.
அவரது அடையாள ஆவணங்களை சரிபார்த்த போது, அவர் 1991-ஆம் ஆண்டு பிறந்த சிரிய நாட்டவர் என்றும் அவர் ஒரு புகலிட கோரிக்கையாளர் என்றும் தெரியவந்துள்ளது.
Haute-Savoie மாகாணம் வெளியிட்ட அறிக்கையின்படி, சம்பவத்தைத் தொடர்ந்து நான்கு குழந்தைகளுக்கு காயங்கள் ஏற்பட்டுள்ளன.
காயமடைந்த அனைவரும் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். அவசர சேவைகள் மற்றும் பாதுகாப்பு படையினர் மிக விரைவாக சம்பவ இடத்துக்கு சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.