காதலனுடன் தங்குவதற்கு சிறுமிக்கு அறை கொடுத்த ஓட்டல் மேலாளர் கைது!

0
254

காதலனுடன் இரவைக் கழிக்க சிறுமியொருவருக்கு விடுதியில் அறையொன்றை வழங்கிய குற்றச்சாட்டில் உஸ்வட்கெயாவ பிரதேசத்தில் உள்ள விடுதியொன்றின் முகாமையாளரும் குறித்த சிறுமியின் காதலனும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் நேற்று (10) வெலிசர நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதையடுத்து எதிர்வரும் 15 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

மஸ்கெலியைச் சேர்ந்த விடுதி முகாமையாளரும், சிறுமியின் காதலன் எனக் கூறப்படும் ராகமையைச் சேர்ந்த 17 வயதுடைய இளைஞனுமே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

பாடசாலை மாணவியான தமது மகளை முந்தைய நாள் இரவு இளைஞர் ஒருவர் அழைத்துச் சென்றதாக சிறுமியின் தாயார் கடந்த 8ஆம் திகதி தமக்கு முறைப்பாடு செய்ததாக கந்தானை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பான விசாரணைகளையடுத்து சிறுமியின் காதலன் என கூறப்படும் இளைஞர் கைதுசெய்யப்பட்டாடுள்ளார்.

சிறுமி கண்டுபிடிப்பு

அவரிடமிருந்து பெறப்பட்ட தகவலின்படி உஸ்வட்டகெயாவ பிரதேசத்தில் உள்ள அழகுசாதன நிலையமொன்றிலிருந்து நேற்றுமுன்தினம் குறித்த சிறுமியும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.

காதலனுடன் தங்குவதற்கு சிறுமிக்கு அறை வழங்கிய விடுதி முகாமையாளர் கைது | Hotel Manager Arrested For Giving Room To Girl

சிறுமியிடம் நடத்தப்பட்ட விசாரணையில், இவ்விருவருக்கும் விடுதியில் அறையொன்றை வழங்கியதாக கூறப்படும், குறித்த விடுதி முகாமையாளரும் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

குறித்த முகாமையாளர், ​​5,000 ரூபாவுக்கு அவர்களுக்கு விடுதியில் தங்குவதற்கு அறை வழங்கியதாக ஒப்புக்கொண்டுள்ளாரென காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில், சிறுமி மருத்துவ பரிசோதனைக்காக ராகம மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக கந்தானை காவல்துறையினர் தெரிவித்தனர்.