மட்டக்களப்பில் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் செயற்குழு உறுப்பினர் மற்றும் அவரது இரண்டரை வயது மகள் ஆகியோர் மீது தாக்குதல் நடாத்தியது தொடர்பில் தமிழரசுக் கட்சியின் போரதீவுப்பற்று இணைப்பாளர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.
நேற்றைய தினம் (27-04-2023) பகல் வெல்லாவெளி பகுதியில் உள்ள பாடசாலைக்கு முன்பாக தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் செயற்குழு உறுப்பினர் மற்றும் பிள்ளை, மனைவி மூவரும் மோட்டார் சைக்கிளில் பிரயாணம் செய்யும் போது வழி மறித்து தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது.
இதன்போது குறித்த மோட்டார் சைக்கிளில் பயணம் செய்த செயற்குழு உறுப்பினரின் இரண்டரை வயது பிள்ளை படுகாயமடைந்த நிலையில் மண்டூர் பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைகளுக்காக களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
இது தொடர்பில் தாக்குதல் நடாத்தியதாக தெரிவிக்கப்படும் தமிழரசு கட்சியின் போரதீவுப்பற்று இணைப்பாளர் வெல்லாவெளி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
வடகிழக்கில் 25-04-2023 ஆம் திகதி இடம்பெற்ற ஹர்த்தால் நாளில் இவர் தனது வர்த்தக நிலையத்தினை திறந்து வைத்திருந்ததாக தெரிவித்து முகப்புத்தகத்தில் இடப்பட்டிருந்த பதிவு ஒன்று தொடர்பிலேயே இவர் குறித்த தாக்குதலை நடாத்தியுள்ளதாக தெரியவருகின்றது.
இவர் உள்ளுராட்சி மன்ற தேர்தலில் போரதீவுப்பற்று பிரதேசசபைக்கு போட்டியிடுகின்றமை குறிப்பிடத்தக்கது.