யாழ்.நல்லூரில் முன்னெடுக்கப்படும் அடையாள உண்ணாவிரத போராட்டம் (Video)

0
348

தமிழர் மரபுரிமைகள் அழிக்கப்படுவதற்கு எதிராக அடையாள உண்ணாவிரத போராட்டம் தற்போது நல்லூரில் நல்லை ஆதீனம் முன்பாக ஆரம்பமாகியுள்ளது.

வடக்கு, கிழக்கில் தமிழர் மரபுரிமைகளை பாதுகாக்குமாறு கோரியே குறித்த போராட்டம் இன்று (16.04.2024) முன்னெடுக்கப்படுகிறது.

ஒருங்கிணைந்த தமிழர் கட்டமைப்பின் ஏற்பாட்டில் இடம் பெறும் குறித்த உண்ணாவிர போராட்டத்தில் பின்வரும் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

கோரிக்கைகள்

1.அழிக்கப்பட்ட வெடுக்குநாறி மலை ஆதி சிவன் கோவில் சிவலிங்கம், தெய்வ சிலைகள் உடனடியாக மீள் நிர்மாணம் செய்யப்பட வேண்டும். நீதியான விசாரணை துரிதப்படுத்தப்பட்டு குற்றவாளிகள் கண்டறியப்பட்டு சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும்.

2.குருந்தூர் மலை, கன்னியா வெந்நீரூற்று ஆதி சிவன் வழிபாட்டு உரிமைகள் உடனடியாக மீள வழங்கப்படுவதுடன் புதிய பௌத்த கட்டுமானம் மற்றும் பௌத்த தொல்லியல் புதிய வர்த்தமானி இரத்து நடைமுறையில் செயற்படுத்தப்பட வேண்டும்.

3.இன மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் வகையில் தமிழர் தாயகத்தின் தொன்மங்களை, மரபுரிமைகளை மாற்றியமைக்கும் தொல்லியல் திணைக்களத்தின் அத்துமீறிய செயற்பாடுகள் அனைத்தும் முற்றாக நிறுத்தப்பட வேண்டும்.

4.மட்டு. மயிலத்தனை மடு மேய்ச்சல் தரையில் பெரும்பான்மை இன மக்களின் ஆக்கிரமிப்புக்கள் சகலதும் நிறுத்தப்பட்டு தமிழ் பண்ணையாளர்களின் மரபுரிமையான மேய்ச்சலுக்கான வாழ்வுரிமை உறுதிப்படுத்த வேண்டும்.

5.போருக்கு பிந்திய இன மதப்பரம்பலை மாற்றி அமைக்கும் திட்டமிட்ட பாரிய குடியேற்றம் உள்ளிட்ட செயற்பாடுகள் அனைத்தும் முற்றாக நிறுத்தப்பட வேண்டும். கடந்த காலங்களில் பல கால அவகாசங்கள் வழங்கப்பட்டு, ஏமாற்றப்பட்ட நிலையில் உரிய தீர்வு உடனடியாக வழங்கப்படாவிடத்து தொடர் போராட்டங்கள் பல்வேறு பரிணாமங்களில் முன்னெடுக்கப்படும் என்பதை அரசாங்கத்துக்கு சர்வதேசத்திற்கும் இச்சந்தர்ப்பத்தில் ஆழமாக வலியுறுத்தி நிற்கின்றோம் என தெரிவித்துள்ளனர்.

ஒருங்கிணைந்த தமிழர் கட்டமைப்பின் ஏற்பாட்டில் இடம் பெறும் குறித்த உண்ணாவிர போராட்டத்தில் சிவகுரு ஆதீன குரு முதல்வரும் p2p பேரியக்கத்தின் இயக்குநருமான வேலன் சுவாமிகள் , தென் கயிலை ஆதீன குரு முதல்வர் அகத்தி அடிகளார், வண பிதா இரவிசந்திரன், அருட்சகோதரிகள், நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்கினேசுவரன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேம சந்திரன், அகில இலங்கை சைவ மகாசபை பொது செயலர் மருத்துவர் நந்தகுமார் மற்றும் உறுப்பினர்கள், பல்கலைக்கழக தொழிற்சங்க பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.

மேலும் இலங்கை தமிழரசு கட்சி தலைவர் மாவை சேனாதிராசா, தமிழ் மக்கள் கூட்டணி பிரமுகர்கள், முன்னாள் வடக்கு மாகாண சபை கல்வி அமைச்சர் கலாநிதி சர்வேஸ்வரன், முன்னாள் மாகாண சபை உறுப்பினர் விந்தன் கனகரட்ணம், முன்னாள் யாழ். மாநகர சபை உறுப்பினர் வரதராஜன் பார்த்தீபன், ஐக்கிய மக்கள் சக்தி வட்டுக்கோட்டை அமைப்பாளரும் மனித உரிமைகளுக்கான கிராமம் அமைப்பின் இயக்குநருமான முருகவேல் சதாசிவம், மருத்துவர்கள் மற்றும் சமய பிரதிநிதிகள் சைவ சமய குருமார்கள் என பலரும் கலந்து கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.