வெளிநாடுகளுக்கு காணிகள் வழங்கப்படுவதில்லை; வடக்கு ஆளுநர் ஜீவன் தியாகராஜா!

0
194

அரசாங்கத்தால் வெளிநாடுகளுக்கு காணிகள் வழங்கப்படுவதில்லை எனவும் சரியான முதலீட்டாளர்களை இனம் கண்டு அவர்களின் திட்டங்களுக்கே தேவையான காணிகளையே வழங்குவதாக வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா தெரிவித்தார்.

வட மாகாண ஆளுநர் செயலகம், யாழ். மாவட்ட செயலகம் 51 ஆவது காலால் படை ஆகியன இணைந்து யாழ். துரைப்பா விளையாட்டு அரங்கில் இன்று சனிக்கிழமை ஏற்பாடு செய்திருந்த புது வருட விழாவில் பிரதம அதிதியாக கலந்து கொண்ட நிலையில், ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதில் வழங்கும்போதே ஜீவன் தியாகராஜா இதனை தெரிவித்தார்.

இந்நிலையில் வடக்கில் 700 ஏக்கர் நிலம் சீனாவுக்கு வழங்கப்பட உள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்த கருத்து தொடர்பில் பதில் அளித்த ஆளுநர், சிறிதரன் கருத்தை நான் அறியாத நிலையில் அவருடைய கருத்துத் தொடர்பில் பதில் கூற முடியாது.

அரசாங்கத்தை பொறுத்தவரையில் நாட்டை பொருளாதார நிதியில் முன்னேற்றுவதற்கான தேவைப்பாடுகள் இருக்கும் நிலையில் முதலீட்டாளர்களுக்கு அரசாங்கம் அழைப்பு விடுத்துள்ளது.

இதன்போது வெளிநாடுகளில் இருந்து பல முதலீட்டாளர்கள் இலங்கையில் முதலீடுகளை மேற்கொள்ள விரும்பும் நிலையில் அவர்களின் சரியான திட்டங்களுக்கு அரசாங்கம் வாய்ப்புகளை ஏற்படுத்தி கொடுக்கிறது.

வடக்கில் முதலீடு செய்வதற்காக தற்போதைய சூழ்நிலையில் யாரும் விண்ணப்பித்துள்ளார்களா என்பது தொடர்பில் எனக்குத் தெரியாது. அவ்வாறு விண்ணப்பித்திருந்தால் அவர்களுக்கு தேவையான காணிகளை இனம் கண்டு கொடுப்பதற்கு மாவட்ட செயலகம் மற்றும் மாகாண காணித் திணைக்களம் அதற்கான பணிகளைச் செய்வார்கள்.

மேலும் அரசாங்கம் காணி வழங்குவதாயின் நாடுகளுக்கு காணிகளை வழங்குவதில்லை நாட்டை அபிவிருத்தி செய்வதற்காக முதலீட்டாளர்களுக்கே காணிகளை வழங்குவதாக ஆளுநர் தெரிவித்தார்.