கொழும்பில் இருந்து யாழ் நோக்கி சென்ற பேருந்து மீது தாக்குதல்; மாரவில பொலிஸார் விசாரணை

0
210

கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து மீது கல் வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டமை தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

சிலாபம் – கொழும்பு பிரதான வீதியின் மாரவில – ஹொரகொல்ல பிரதேசத்தில் நேற்று இரவு கல் தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக மாரவில பொலிஸார் தெரிவித்தனர்.

மோட்டார் சைக்கிளில் வந்த இருவரே இந்தத் தாக்குதலை மேற்கொண்டுள்ளதுடன், அவர்களை அடையாளம் காண விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மோட்டார் சைக்கிளில் வந்த இருவரில் ஒருவர் தான் ஓட்டிச் சென்ற பேருந்து மீது கற்களை வீசியதாக பேருந்தின் சாரதி மாரவில பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

கல் தாக்குதலால் பேருந்தின் முன்பக்க இடது புறம் சேதமடைந்துள்ளதுடன், தாக்குதலை நடத்தியவர்கள் யார் என தமக்கு தெரியாது என முறைப்பாட்டாளர் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார். கல் வீச்சில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என குறிப்பிடப்படுகின்றது.

கல் வீசி தாக்குதல் நடத்தியது யார் என்பது இதுவரை தெரியவராத நிலையில் மாரவில பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.