துருக்கியில் இருந்து புறப்பட்டு இத்தாலி நோக்கி சென்ற புலம்பெயர் மக்களின் படகு உடைந்து 67 பேர் பலியான நிலையில் தற்போது அவர்களின் சவப்பெட்டிகள் பொதுமக்கள் அஞ்சலிக்காக தெற்கு இத்தாலியில் விளையாட்டு மைதானம் ஒன்றில் வைக்கப்பட்டுள்ளது.
மைதானம் முழுக்க சவப்பெட்டிகள் நிரம்பியிருந்த காட்சிகள் பார்வையாளர்களை கண்கலங்க வைத்துள்ளது. இதனிடையே விபத்து நடந்த கடற்பகுதியில் நான்காவது நாட்களாக தற்போதும் ஹெலிகொப்டர் மூலமாக தேடுதல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
புதிதாக குழந்தை ஒருவரது சடலம் உட்பட மூவரின் சடலம் மீட்கப்பட்ட நிலையில் பலி எண்ணிக்கை 67 என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. துருக்கியில் இருந்து சட்டவிரோதமாக இத்தாலி செல்ல படகோட்டிகளுக்கு அதிக தொகை அளித்து அந்த புலம்பெயர் மக்கள் பயணப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், கடுமையான கடல் சீற்றத்தில் சிக்கி இவர்களின் படகு உடைந்துள்ளது. இதில் துரித நடவடிக்கையின் ஊடாக 80 பேர்கள் காப்பாற்றப்பட்டுள்ளனர். மேலும் அந்த படகில் 170 அல்லது அதற்கும் மேற்பட்ட மக்கள் பயணித்திருக்கலாம் என்றே அஞ்சப்படுகிறது.
விளையாட்டரங்கில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ள சவப்பெட்டிகளில் பெரியவர்களுக்கு பழுப்பு நிறமும் குழந்தைகளுக்கு வெள்ளை நிறமும் அளிக்கப்பட்டிருந்தது. மட்டுமின்றி விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்தினர் கண்ணீருடன் அந்த சவப்பெட்டிகள் அருகாமையில் காணப்பட்டனர்.