யாழ்ப்பாணம் மற்றும் களனி பல்கலைக் கழகங்களின் துணைவேந்தர் பதவிக்காக இம்மாத ஆரம்பத்தில் கோரப்பட்டுள்ள விண்ணப்பங்கள் இரத்துச் செய்யப்படும் நிலை ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பல்கலைக்கழகங்களில் துணை வேந்தர்களை நியமிப்பதற்கான தெரிவு முறையில் மாற்றங்கள் செய்யப்படவுள்ளமையினால் மேற்படி பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர் தெரிவுக்கான விண்ணப்பங்கள் இரத்து செய்யும் நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன் காரணமாக துணைவேந்தர் பதவிக்கு விண்ணப்பம் கோருவதை மறு அறிவித்தல் வரை நிறுத்தி வைக்குமாறு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு, பல்கலைக் கழகங்களை அறிவுறுத்தியுள்ளது.
சுற்று நிருபம் மீளாய்வு
பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர் பதவி நியமனத்துக்காக நடைமுறையில் இருக்கும் சுற்று நிருபம் மீளாய்வு செய்யப்பட்டு புதிய நடைமுறைகள் விரைவில் அறிவிக்கப்படவுள்ளது.
எனவே துணைவேந்தர் பதவிக்கு விண்ணப்பம் கோருவதற்கான எந்தவொரு நடவடிக்கையையும் ஆரம்பிக்க வேண்டாம் எனவும், புதிய நடைமுறைகள் கொண்ட சுற்றுநிருபம் வெளிவந்த பின்னர் அதன் அடிப்படையில் விண்ணப்பங்களைக் கோருமாறும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் சிரேஷ்ட பேராசிரியர் சம்பத் அமரதுங்க பல்கலைக் கழகங்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.