மைத்திரியை எச்சரித்து குற்றவாளி கூண்டிற்குள் ஏறுமாறு உத்தரவிட்ட நீதவான்..

0
246

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை எச்சரித்து குற்றவாளி கூண்டிற்குள் ஏறுமாறு கொழும்பு கோட்டை நீதவான் திலின கமகே இன்று உத்தரவிட்டுள்ளார். ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பான வழக்கில் மைத்திரிபால சிறிசேன பிரதிவாதியாக சேர்க்கப்பட்டுள்ளார்.

நீதிமன்றத்தில் முன்னிலையான மைத்திரிபால குற்றவாளி கூண்டிற்குள் ஏறி நின்று சாட்சியம் அளிக்க தவிர்த்தார். இதனையடுத்து அவரை எச்சரித்து குற்றவாளி கூண்டில் ஏறுமாறு நீதவான் திலின கமகே உத்தரவிட்டுள்ளார்.

கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோணியார் தேவலாயத்தின் மீது நடத்தப்பட்ட தற்கொலை தாக்குதலில் கால் ஒன்றை இழந்த ஒருவரும், வணக்கத்திற்குரிய சிறில் காமினி ஆண்டகையும் இந்த வழக்கை தாக்கல் செய்துள்ளனர்.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுக்கப்பட்ட போது மைத்திரிபால சிறிசேன குற்றவாளி கூண்டில் ஏமாறாது அருகில் நின்றுக்கொண்டிருந்தார்.

அப்போது முறைப்பாட்டாளர் தரப்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி ரியன்சி அர்சகுலரத்ன, குற்றவாளி கூண்டிலுக்கு வெளியில் இருப்பது குறித்து நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு வந்து எதிர்ப்பை முன்வைத்துள்ளார்.

இதனையடுத்து தனது தரப்பு வாதிக்கு எதிராக தாக்கல் செய்துள்ள தனிப்பட்ட வழக்கு சம்பந்தமான அடுத்த கட்ட நடவடிக்கை எடுப்பதற்கான மேன்முறையீடு இடைநிறுத்தப்பட்டுள்ளதால், அவர் குற்றவாளி கூண்டிலில் ஏறவில்லை என மைத்திரிபால சிறிசேனவின் சார்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி பைசர் முஸ்தபா சுட்டிக்காட்டியுள்ளார்.

மேன்முறையீட்டு நீதிமன்றம் சந்தேக நபருக்கு குற்றப்பத்திரிகை வாசித்து காட்டப்பட்டு வழக்கு நடவடிக்கைகள் தொடர்பில் உத்தரவிடும் வரை தவிர்ப்பை மாத்திரமே மேன்முறையீட்டு நீதிமன்றம் வழங்கியுள்ளது எனவும் குற்றவாளி கூண்டிற்குள் ஏற வேண்டாம் என உத்தரவிடவில்லை எனவும் கோட்டை நீதவான் திலின கமகே கூறியுள்ளார்.

அத்துடன் சந்தேக நபர்களின் பெயர்களை மீண்டும் கூறி வரிசைப்படுத்துமாறு நீதிமன்ற மொழிப்பெயர்ப்பாளருக்கு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

இதன் பின்னர் இரண்டாம் முறை வழக்கு விசாரணைக்கு எடுக்கப்பட்ட போது மைத்திரிபால சிறிசேன கூண்டில் ஏறி நின்றார். வழக்கு மீண்டும் விசாரணைக்கு எடுக்கும் சந்தர்ப்பங்களில்  சந்தேக நபர் இருக்க வேண்டிய குற்றவாளி கூண்டிற்குள் ஏற வேண்டும் எனவும் நீதவான் எச்சரித்துள்ளார்.

இதன் பின்னர் வழக்கு விசாரணைகளை எதிர்வரும் மார்ச் 17 ஆம் திகதிக்கு நீதவான் ஒத்திவைத்துள்ளார்.