இலங்கையில் மின் கட்டணம் அதிகரிப்பு தொடர்பில் அரசாங்கத்திற்குள் நெருக்கடி நிலைமை ஏற்பட்டுள்ளது.
மின்சாரக் கட்டணத்தை அதிகரிக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் ஜனாதிபதி தலைமையிலான பொதுஜன பெரமுனவின் பெரும்பான்மையானவர்கள் இருப்பதாலும், முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான பொதுஜன பெரமுனவைச் சேர்ந்த சிறுபான்மைக் குழு கட்டணத்தை அதிகரிக்க கூடாதென்ற நிலைப்பாட்டில் இருப்பதாலும் இந்த உள்ளக நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
நெருக்கடி நிலை காரணமாக மின்சார கட்டண அதிகரிப்பு தொடர்பான தீர்மானத்தை இன்று வரை ஒத்திவைக்க அமைச்சரவை தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சர்வதேச நாணய நிதியத்தின் கடனை துரிதப்படுத்தும் வகையில் மின் கட்டணத்தை அதிகரிக்க வேண்டும் எனவும், பத்து வருடங்களுக்கு மேலாக மின்சார கட்டணம் அதிகரிக்கப்படவில்லை எனவும் ஜனாதிபதி ஆளும் கட்சியினரிடம் சுட்டிக்காட்டியுள்ளார்.
மின்சார கட்டணத்தை அதிகரிப்பது என்பது விரும்பி செய்யும் தீர்மானம் இல்லையென்றாலும், அது நாட்டுக்காக செய்ய வேண்டிய பணி எனவும், இல்லையெனில் அதன் பாதகமான விளைவுகளை நாடு சந்திக்க நேரிடும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எவ்வாறாயினும், மின் கட்டண அதிகரிப்பு தொடர்பில் எழுந்துள்ள உள்ளக நெருக்கடியின் பின்னணியில், மின் கட்டணத்தை அதிகரிப்பதற்கான பிரேரணை இன்று மீண்டும் அமைச்சரவையில் கொண்டுவரப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.