புக்கிட் தீமாவில் உள்ள பியூட்டி வேர்ல்ட் அருகே இரண்டு மாடி கூட்டுரிமை உச்சிமாடி வீட்டில் தனியாக வசித்து வரும் திருவாட்டி யாங் என்ற 31 வயது சிங்கப்பூர் மாது, தன்னுடைய வீட்டு கழிவறைக்கு உள்ளேயே நான்கு நாள்களாக அடைபட்டுவிட்டார்.
வெறும் தண்ணீர்தான் அவருக்குக் கிடைத்தது. தூக்கம் வந்தபோது கழிவறைத் தொட்டியில் அமர்ந்தபடியே தூங்கினார். கைப்பேசியும் அப்போது அவரிடம் இல்லை. அது வீட்டின் கழிவறைக்கு வெளியே இருந்தது.
திருவாட்டி யாங் தன்னுடைய முழு பெயரைத் தெரிவிக்க மறுத்துவிட்டார். அவருடைய வீட்டுக் கழிவறையில் சன்னல் கிடையாது.
கதவின் தாழ்ப்பாள் பிடி உடைந்துபோய் கோளாறாக இருந்ததால் திறக்க முடியாமல் கதவு மூடிக் கொண்டுவிட்டது.
நாலாபுறமும் சுவரை இடித்துப் பார்த்தும் பலன் இல்லை. அந்த மாதின் உறவினர்கள் சீனாவில் இருக்கிறார்கள். அன்றாடம் அவர் பெற்றோருக்கு குறுஞ்செய்தி அனுப்புவார்.
சில நாள்களாக குறுஞ்செய்தி கிடைக்காமல் போனதை அடுத்து நிச்சயம் தன்னுடைய பெற்றோர் செயலில் இறங்குவார்கள் என்ற நம்பிக்கையுடன் அவர் இருந்தார்.
ஆனாலும் நான்கு நாள்கள் உள்ளேயே தவிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுவிட்டது.
அன்றாடம் கழிவறைக் கதவை வேகமாக தட்டுவார். யாருக்காவது சத்தம் கேட்கும் என்ற நம்பிக்கையில் குறிப்பாக காலை வேளையில் வேகமாகக் கதவைத் தட்டுவார்.
வீட்டின் கதவு மணி ஒலிக்கும் போதெல்லாம் வேகமாகத் தட்டுவார். கழிவறைக்குள் இருந்தபோது தன் குடும்பம், வேலை, எதிர்காலத்தில் இதுபோன்ற சூழ்நிலைகளை எல்லாம் எப்படி தவிர்த்துக்கொள்ளலாம் என்பது பற்றிய சிந்தனை ஆகியவைதான் அவருடைய மனதில் இடம்பெற்றன.
கழிவறைக்கு வெளியே அவர் செல்லமாக வளர்த்து வரும் கிளி குரல் கொடுத்து பாடுவதைக் கேட்கும் போதெல்லாம் அவரின் மனம் ஒரு மாதிரியாகப் போய்விடும்.
ஆனால் கிளி பாடியதும் இவர் தட்டியதும்தான் மிச்சம்.
கடைசியாக அந்த மாதைக் காணவில்லை என்று நவம்பர் 27ஆம் தேதி காவல்துறைக்கு அவரின் உறவினர் ஒருவர் தகவல் தெரிவித்தார். அதிகாரிகள் அவர்வீட்டிற்குச் சென்று பாதுகாவலர் ஒருவரின் உதவியுடன் வீட்டின் உள்ளே போய் பலவந்தமாக கழிவறைக் கதவைத் திறந்தனர்.
அந்த மாது அணிந்துகொள்ள துண்டு, உடைகளைக் கொடுத்தனர். வெளியே வந்து பார்த்தபோது அவருடைய வீட்டிற்கு வெளியே பல பார்சல்கள் கிடந்தன.
கைப்பேசி அணைந்து போய் இருந்தது. அதில் மின்சக்தியை ஏற்றி பார்த்தபோது 40 குறுஞ்செய்திகள் குவிந்துகிடந்தது தெரியவந்தது.
கழிவறையில் இருந்து மாது வெளியே வந்ததும் மருத்துவர்கள் சோதித்தனர். அவருக்கு எந்த பாதிப்பும் இல்லை. முதல் காரியமாக அவர் தன் பெற்றோருக்கு நடந்ததைக் கூறி தான் பாதுகாப்பாக இருப்பதாகத் தெரிவித்தார். பிறகு சாப்பிட்டார்.
கழிவறையில் தனியாக ஒரு கைப்பேசி அல்லது நவீன தொலைபேசிக் கடிகாரம் ஒன்றை இனி வைத்துவிட வேண்டும் என்று அவர் திட்டமிடுகிறார். “இனி என் வாழ்நாளில் கழிவறைக் கதவை முற்றிலும் மூடவேமாட்டேன்,” என்று திருவாட்டி யாங் கூறினார்.