சர்வதேச ரீதியில் இலங்கையின் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க (Ranil Wickremesinghe) மற்றும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவினால் (Chandrika Kumaratunga) மாத்திரமே முடியும் என புதிய இலங்கை சுதந்திர கட்சியின் தலைவர் குமார் வெல்கம (Kumara Welgama) நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் அரசாங்கத்துடன் தாம் இணைந்து செயற்படப் போவதில்லை என நேற்றைய தினம் (04-11-2022) நடைபெற்ற கட்சி நிகழ்வொன்றின் பின்னர் செய்தியாளர்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
‘தொழிற்சங்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகள் இணைந்து இலங்கையில் அண்மையில் முன்னெடுத்த போராட்டம் ஒரு தோல்வி அடைந்த போராட்டம்.
குறித்த போராட்டத்தில் ஏற்பட்ட குழப்பம் அரசாங்கத்தினை தூண்டிவிடப்பட்டது எனக் கலந்து கொண்ட அரசியல்வாதிகள் தெரிவித்துள்ளனர்.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவை (Sajith Premadasa) போராட்டத்தின் போது அகௌரவப்படுத்தியது தவறான விடயமாகும். அவரது தலைமைத்துவத்தில் சில குறைபாடுகள் இருந்தாலும் அவர் ஒரு நேர்மையான தலைவர்.
இலங்கையில் நடைபெற்ற பல கலவரங்களை தாண்டி நாட்டின் ஜனாதிபதியாக பதவியேற்ற ரணில் விக்கிரமசிங்கவுக்கு நாம் கால அவகாசம் வழங்க வேண்டும். அரசாங்கத்தின் செலவுகளை குறைக்க ஜனாதிபதி முயற்சிக்க வேண்டும்.
இராஜாங்க அமைச்சர்களை வீணாக நியமிப்பதும் ஒரு வீணான செலவு என அவர் கூறினார்.
சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து அரசாங்கத்திற்கு நிதி உதவி கிடைக்கப்பெற்றாலும் அதுவும் ஒரு கடன் உதவி மாத்திரமே. இவ்வாறாக கிடைக்கப்பெறும் உதவிகளை ஜனாதிபதி சரிவர பயன்படுத்த வேண்டும்.
அமைச்சரவை அமைச்சர்களை அதிபர் நியமிப்பதன் மூலம் அவர் எவ்வாறான ஆட்சியை செய்கிறார் என்பதை எதிர்வரும் காலங்களில் புரிந்துகொள்ள முடியும்’ என அவர் மேலும் குறிப்பிட்டார்.