மட்டக்களப்பில் உரிமையாளர் உயிரிழந்ததையடுத்து அவரது சடலத்தின் மீது ஏறி கட்டியணைத்து அழுத குரங்கு!

0
405

மட்டக்களப்பு தாளங்குடா பிரதேசத்தில் குரங்கு ஒன்று உரிமையாளர் உயிரிழந்ததையடுத்து அவரின் சடலத்தில் ஏறி அவரை கட்டியணைத்து அழுது புலம்பி உள்ளது.

அவரின் இறுதி கிரியை நடந்த மயானத்திற்கு சென்று அவருக்கு அஞ்சலி செலுத்திய சம்பவம் செவ்வாய்க்கிழமை (18) அனைவரையும் கண்கலங்கவைத்ததுடன் பெரும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

தாளங்குடா பிரதேசத்தினைச் சேர்ந்த 56 வயதுடைய இரு பிள்ளைகளின் தந்தையான பீதாம்பரம் ராஜன் காட்டில் இருந்து வந்த குரங்கு ஒன்றிற்கு உணவு வழங்கி வந்துள்ளார்.

குறித்த குரங்கும் தினமும் அவரது வீட்டிற்கு வந்ததும் அவர் அதற்கு பிஸ்கட்களை வழங்குவதுடன் அவரின் விசேட தேவையுடைய பிள்ளை அறையில் இருந்து குரங்கு இழுத்துவந்து அந்த பிள்ளையுடன் பிஸ்கட் சாப்பிடுவது வழக்கம் இந்த நிலையில் திங்கட்கிழமை (17) இரவு சகயீனம் காரணமாக அவர் திடீரேன உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில், அவரின் வீட்டில் இறுதிக்கிரியைகள் செவ்வாய்க்கிழமை செய்வதற்கு உறவினர்கள் சடலத்தை வைத்தியசாலையில் இருந்து கொண்டுவந்து வைத்தபோது அங்கு வந்த குரங்கு அவர் சடலமாக இருப்பதை பார்த்து அவரின் பக்கம் சென்று அவருக்கு மூச்சு உள்ளதா என சோதித்து அவரின் கழுத்து சட்டையை பிடித்து இழுத்து அவரை எழுப்புவதற்கு பல முயற்சிகளை செய்தது.

ஆனால் அவர் படுக்கையில் இருந்து எழும்பாததையடுத்து குரங்கு கண்ணீர் விட்டு அழுததுடன் அவரின் காலை தொட்டு கும்பிட்டு அவரின் அருகில் தொடர்ந்து அமர்ந்து அங்கு இறுதிகிரியையில் கலந்துகொள்ள வந்த உறவினர்கள் குரங்கின் செயலைகண்டு கண்ணீர்விட்டு அழுததுடன் குரங்கு அருகில் இருந்து செயற்பட்ட காட்சிகளை பார்த்து அனைவரும் ஆச்சரியமடைந்தனர்.

அதேவேளை சடலத்தை மயானத்துக்கு கொண்டு சென்ற நிலையில் குரங்கு அங்கு சென்று தனக்கு உணவு தந்தவர் இல்லையே என்ற உணவர்வுடன் நன்றியையும் அஞ்சலியையும் செலுத்தியுள்ளமை பெரும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.