போதைப்பொருளுக்கு அடிமையான 40 வயதுடைய ஒருவர் மனநலம் பாதிக்கப்பட்ட 66 வயதான பெண்ணொருவரை கடந்த 9ஆம் திகதி துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியுள்ளார்.
அந்தப் பெண்ணை வன்புணர்வுக்கு உட்படுத்திய சந்தேகநபரை பருத்தித்துறை பொலிஸார் இதுவரை கைது செய்யவில்லை. கைது செய்வதற்கான அக்கறையும் காண்பிக்கவில்லை என்று குற்றம் சுமத்தப்படுகின்றது.
சந்தேகநபர் கடந்த 9 ஆம் திகதி சிறையிலிருந்து விடுதலையானவர் என்பதோடு அவர் மீது கொலை மற்றும் உயிர்கொல்லி போதைப் பொருளை உடைமையில் வைத்திருந்த குற்றச்சாட்டுக்கள் என்பன உள்ளன.
சம்பவம்
கடந்த 9 ஆம் திகதி பாதிக்கப்பட்ட பெண்ணின் வீட்டுக்கு முன்னால் இரவு வேளை சந்தேகநபர் ஹோர்ன்’ அடித்துள்ளார்.
பெண் வெளியே வந்ததும் அவரது வீட்டு வாசலில் வைத்தே குறித்த பெண்ணை வன்புணர்வுக்கு உட்படுத்தியுள்ளார்.
பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு அவரது 70 வயதான சகோதரி அங்கு வந்தபோது அவர் மீது சந்தேக நபர் தாக்குதல் நடத்தியுள்ளார்.
காயமடைந்த இரு பெண்களும் பருத்தித்துறை ஆதார மருத்துவமனையில் மறுநாள் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு, சிகிச்சையின் பின்னர் வீடுதிரும்பியுள்ளனர்.
சம்பவம் இடம்பெற்று 9 நாள்கள் கடந்துள்ள நிலையிலும் சந்தேக நபரை பருத்தித்துறை பொலிஸார் இன்னும் கைது செய்யவில்லை. பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு 5 பிள்ளைகள் உள்ளனர். அவர்கள் வேறு இடங்களில் வசித்து வருகின்றனர் என்பது தெரியவந்துள்ளது.