கொழும்பு – வெள்ளவத்தை பிரதேசத்தில் அமைந்துள்ள ஹோட்டல் ஒன்றை பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவினர் தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்துள்ளனர்.
வெள்ளவத்தை – ராமகிருஷ்ணா வீதியில் உள்ள ஹோட்டல் ஒன்று அண்மையில் சுமார் ஒரு கோடி ரூபா செலவில் புனரமைக்கப்பட்டு மீளத் திறந்து வைக்கப்பட்டிருந்தது .
பொரலஸ்கமுவ பிரதேசத்தைச் சேர்ந்த நபரொருவரரே இந்த ஹோட்டலை நடத்திச்செல்வதாக கண்டறியப்பட்டுள்ளது.
போதைப்பொருள் வர்த்தகரின் மகனுக்குச் சொந்தமான ஹோட்டல்
எனினும் ஹோட்டலை புனரமைப்பதற்காக ஒரு கோடி ரூபா பணத்தை எவ்வாறு உழைத்துக் கொண்டார் என்பது தொடர்பில் போதுமான ஆதாரங்களை முன்வைக்கவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் குறித்த நபரின் தந்தை பிரதேசத்தில் பிரபல போதைப்பொருள் வர்த்தகராக இருக்கும் நிலையில், சட்டவிரோதமாக உழைத்த பணத்தை மகன் தனது ஹோட்டல் விரிவாக்கப் பணிகளுக்கு பயன்படுத்திக் கொண்டிருக்கலாம் என்ற சந்தேகம் பொலிஸாருக்கு ஏற்பட்டதையடுத்து குற்றத் தடுப்பு பொலிஸார் அதனை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளனர்.
உயர்நீதிமன்றத்தில் வழக்குத்தாக்கல்
சம்பவம் தொடர்பில் கொழும்பு உயர்நீதிமன்றத்தில் பொலிஸாரினால் வழக்குத் தொடுக்கப்பட்டுள்ளதுடன், ஹோட்டலை பயன்படுத்தவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.