சுமார் 300 அடி உயரமான ஒடுங்கிய மலை இடுக்கில் நிர்வாணமாக கோலத்தில் சிக்கியிருந்த ஓர் இளைஞனை பிரேஸில் மீட்பு குழுவினர் மீட்டுள்ளனர்.
பிரேஸிலின் மேஸ்ட்ரே அல்வாரோ இயற்கை வன சரணாலயத்தில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
19 வயதான இளைஞனே இவ்வாறு மீட்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்திலிருந்து 18 மைல் தூரத்தில் விலா வெல்ஹா நகரைச் சேர்ந்தவர் இவர். இரு பாறைகளுக்கு இடையிலான ஒடுங்கிய பகுதியில் அந்த இளைஞர் சிக்கியிருந்தார்.
கடந்த 7 ஆம் திகதி காலை அந்த இளைஞர் உதவி கோரி கூக்குரலிடுவதை அப்பகுதியில் சென்ற ஒருவர் செவிமடுத்ததன் மூலம் இந்த இளைஞரின் நிலை மற்றவர்களுக்கு தெரியவந்தது.
பொலிஸார், தீயணைப்புப் படையினர், விமானப்படையினர் முதலானோர் இணைந்து இந்த இளைஞரை மீட்டனர். இதற்காக ஹெலிகொப்டரும் பயன்படுத்தப்பட்டு அந்த இளைஞர் பின்னர் வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
எனினும் தான் மேற்படி மலை இடுக்கில் நிர்வாணமாக சிக்கியமை எப்படி என்பது தனக்கு நினைவில்லை என மேற்படி இளைஞர் கூறியுள்ளார்.
பிரேஸில் விமானப்படையைச் சேர்ந்த மேஜர் பாப்லோ ஏங்லி மார்கஸ் (Pablo Angley Marcus) இது தொடர்பாக கூறுகையில்,
‘சென்றடைவதற்கு கடினமான ஒரு பகுதியில் அவர் இருப்பதை நாம் கண்டோம். எந்த வேளையிலும் அவர் கீழே வீழ்ந்து விடும் ஆபத்து இருந்தது.
அவரை மீட்பதற்காக ஹெலிகொப்டர் மீட்புக்குழு ஒன்றையும் நாம் பயன்படுத்தினோம். சுமார் 80 – 10 மீற்றர் பள்ளத்தில் அவர் இருந்தார்.
மீட்பு நடவடிக்கையின் போது அவர் சுய உணர்வுடன் காணப்பட்டார். எனினும், தான் ஏன் நிர்வாணமாக காணப்பட்டார் என அவரால் விளக்க முடியவில்லை. தான் எவ்வாறு அங்கு சென்றார் என்பதும் தனக்கு நினைவில்லை என அவர் கூறுகிறார்’ என மேஜர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.