திருமணம் ஆயிரம் காலத்து பயிர் என முன்னோர்கள் சொல்வதுண்டு. திருமணம் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுவது என்பது ஐதிகம். நான்கு தலைமுறைகளுடன் நூற்றாண்டு விழா கண்ட தம்பதிக்கு திருமணம் இடம்பெற்ற சம்பவம் தமிழகத்தில் இடம்பெற்றுள்ளது.
தமிழகத்தின் கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அடுத்த தேன்கனிக்கோட்டை டி.ஜி.தொட்டி கிராமத்தில் வசிக்கும் முனியப்பா (100), அவருடைய மனைவி குண்டம்மா மாரம்மா (96) ஆகியோர் நூறாண்டு கடந்து ஆரோக்கியத்துடன் வாழ்ந்து வருகின்றனர்.
இவர்களின் நூற்றாண்டு விழாவை குடும்பத்தார் கோலாகலமாக கொண்டாடியுள்ளனர்.
நான்கு தலைமுறை உறவினர்கள்
தேன்கனிக்கோட்டை கவி லட்சுமி நரசிம்மசுவாமி கோயிலில் நூறாண்டு கடந்து வாழும் தம்பதிக்கு புரோகிதர்கள் வேத மந்திரங்கள் ஓத கெட்டி மேளம் கொட்டி மலர் மாலைகள் அணிவித்து திருமணம் நடைபெற்றது.
இந்த தம்பதியினருக்கு மகன்கள், மருமகள்கள், பேரன், பேத்திகள், கொள்ளூ பேரன், எள்ளு பேரன் என நான்கு தலைமுறையினர், உறவினர்கள், ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டு அவர்களிடம் ஆசி பெற்று வாழ்த்து பெற்றனர்.
இன்றைய காலகட்டத்தில் பல இளைய தலைமுறைகள் இன்று கல்யாணம் நாளை விவாகரத்து என இருந்து வரும் நிலையில் 100 வயது வரை மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்த தம்பதிக்கு குடும்பத்தினர் திருமணம் நடத்தி வைத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.