ஆப்கானிஸ்தானை தலிபான் பயங்கரவாதிகள் கைப்பற்றிய நிலையில் நாட்டைவிட்டு வெளியேற முடிவு செய்த மக்களில் ஆயிரக்கணக்கானோரை ஒரே ஒரு பெண் காப்பாற்றிய விடயம் தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
ஆப்கானிஸ்தான் மொத்தமாக தலிபான்களின் பிடியில் சிக்கிய நிலையில் ஆயிரக்கணக்கானோர் நாட்டைவிட்டு வெளியேறும் நோக்கில் காபூல் விமான நிலையத்தில் குவிந்தனர்.
இந்த நிலையில், தலிபான்களை எதிரிகளாக பாவிக்கும் ஐ.எஸ் அமைப்பினர் விமான நிலையம் அருகாமையில் தற்கொலை வெடிகுண்டு தாக்குதலை முன்னெடுத்தனர். குறித்த தாக்குதல் சம்பவத்தில் மொத்தம் 183 அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர்.
இருப்பினும் அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகள் விமானங்களை அனுப்பி அங்குள்ள அப்பாவி மக்களை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டது. அப்போது அங்குள்ள அப்பாவி மக்களுக்கு ஆதரவாக செயல்பட்டவர் 56 வயதான கத்ரீனா ஜான்சன் என்ற பெண்மணி.
காபூலில் உள்ள பிரித்தானிய தூதரகத்தில் கான்சல் ஜெனரல் மற்றும் பின்னர் பாதுகாப்பு அதிகாரியாகவும் செயல்பட்டவர் இவர். இவரே ஆப்கானிஸ்தானில் இருந்து தலிபான்களின் பிடியில் சிக்காமல் இருக்க அப்பாவி மக்களை விமானங்களில் வெளியேற்றிவர்.
மொத்தம் 15,000 பேர்களை வெளியேற்றியுள்ளதாக கூறும் கத்ரீனா ஜான்சன் ஆப்கானிஸ்தானில் இருந்திருந்தால் இவர்களில் பெரும்பாலானவர்கள் இப்போது உயிருடன் இருப்பார்களா என்பது சந்தேகமே எனவும் தெரிவித்துள்ளார்.