நியூசிலாந்தில் ஏலத்தில் வாங்கப்பட்ட சூட்கேஸ் இரண்டில் சிறார்களின் நாள்பட்ட சடலம் கண்டெடுக்கப்பட்ட நிலையில் அவர்கள் தென்கொரிய நாட்டவர்களாக இருக்கலாம் என பொலிசார் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.
தென் கொரியாவில் பிறந்து நியூசிலாந்தில் குடியேறிய குடும்பமாக இருக்கலாம் எனவும் அந்த சிறார்கள் இருவரும் நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் இறந்திருக்கலாம் என அறியவந்துள்ள நிலையில் குறித்த உறவினர் சிறார்களின் தாயாராக இருக்க வாய்ப்புள்ளதாகவும் அவர் தென் கொரியாவுக்கு தப்பியிருக்கலாம் எனவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.
2018ல் நியூசிலாந்துக்கு திரும்பிய 40 வயது கடந்த அந்த தாயாருடன் குடும்ப உறுப்பினர்கள் எவரேனும் உடனிருந்தார்களா என்பது தொடர்பில் உறுதியான தகவல் எதுவும் இல்லை எனவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.
மட்டுமின்றி அவருக்கு முன்னர் நியூசிலாந்து குடியுரிமை வழங்கப்பட்டுள்ளதாகவும் குறைந்தது மூன்று அல்லது நான்கு ஆண்டுகளுக்கு பதிவு செய்யப்பட்ட முகவரியில் சூட்கேஸ்கள் பாதுகாக்கப்பட்டதாகவும் அதிகாரிகள் நம்புகின்றனர்.
இந்த மாத துவக்கத்தில் ஆக்லாந்து குடும்பம் ஒன்று கைவிடப்பட்ட நிலையில் உள்ள சூட்கேஸ்கள் இரண்டை ஏலத்தில் வாங்கியுள்ளனர். சூட்கேஸ்களை திறந்து பார்த்த அந்த குடும்பத்திற்கு பெரும் அதிர்ச்சியாக இருந்துள்ளது. அந்த சூட்கேஸில் காணப்பட்ட மனித எச்சங்கள்.
இதனையடுத்து நியூசிலாந்து பொலிசார் படுகொலை தொடர்பில் வழக்கு பதிவு செய்து விசாரணை முன்னெடுத்தனர். ஆனால் சம்பவம் நடந்து பல ஆண்டுகள் கடந்துள்ள நிலையில் இந்த வழக்கு விசாரணை என்பது கடினமான பணி என பொலிசார் கூறியுள்ளனர்.
இதனிடையே, தென் கொரியா பொலிசாரும் இந்த விவகாரம் தொடர்பில் விசாரணைக்கு பின்னர் வெளியிட்ட தகவலில் தொடர்புடைய பெண் அந்த சிறார்களின் தாயார் எனவும் தென் கொரியாவில் பிறந்து நியூசிலாந்தில் குடியேறியவர் குறித்த பெண் எனவும் உறுதி செய்துள்ளனர்.