சர்வகட்சி அரசாங்கத்தில் பொதுஜன பெரமுனவுக்கு மேலும் அமைச்சுப் பதவிகளை வழங்க ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மறுத்துவிட்டதாக அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
சர்வகட்சி அரசாங்கத்தை அமைப்பது தொடர்பாக ஜனாதிபதி மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர்களுக்கு இடையில் விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இதன்போது கூடுதலான அமைச்சரவை அமைச்சர் பதவிகள் மற்றும் இராஜாங்க அமைச்சர் பதவிகள் வழங்க வேண்டும் என கோரப்பட்டது. அத்துடன் சில நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அமைச்சுப் பதவிகளை வழங்க பல அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளதாக ஜனாதிபதி தரப்பில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
16 பேரின் பெயர் பரிந்துரை
அமைச்சுப் பதவிகள் வழங்கப்பட வேண்டிய பதினாறு நாடாளுமன்ற உறுப்பினர்களின் பட்டியலை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சமர்ப்பித்துள்ளது.
இந்நிலையில் நாமல் ராஜபக்ஷ, ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, ரோஹித அபேகுணவர்தன மற்றும் மஹிந்தானந்த அளுத்கமகே ஆகியோருக்கு அமைச்சுப் பதவிகளை வழங்க வேண்டாம் என எதிர்க்கட்சி உறுப்பினர்கள் ஜனாதிபதிக்கு அறிவித்துள்ளனர்.
எவ்வாறாயினும், அமைச்சுப் பதவிகளை பெற்றுக் கொள்வதற்காக ஜனாதிபதியுடன் தனித் தனியாக பேச்சுவார்த்தை நடத்தாமல் கட்சியாக பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என அக்கட்சியின் ஸ்தாபகர் பசில் ராஜபக்ஷ உறுப்பினர்களுக்கு அறிவித்துள்ளார்.
அதேவேளை சர்வகட்சி அரசாங்கத்தை அமைப்பது தொடர்பாக இன்னும் பதினைந்து நாட்களில் அரசியல் கட்சிகளுடன் கலந்துரையாடல்களை மேற்கொள்ள ஜனாதிபதி தீர்மானித்துள்ளார்.
இதற்கிடையில், இம்முறை இராஜாங்க அமைச்சர்களின் எல்லைகளை வர்த்தமானியில் வெளியிடக்கூடாது என்ற யோசனையும் ஜனாதிபதியிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
அதேசமயம் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, இராஜாங்க அமைச்சர்களின் எல்லைகளை தனித்தனியாக வர்த்தமானியில் வெளியிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.