சீன கப்பலுக்கு அனுமதி அளித்துள்ள இலங்கையின் துரோகத்தை இந்தியா புரிந்து கொள்ள வேண்டும் என பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது ருவிட்டர் பதிவில் குறிப்பிடுகையில்,
இந்தியாவின் அழுத்தத்தைத் தொடர்ந்து சீன உளவுக் கப்பலுக்கு அனுமதி மறுத்த இலங்கை அரசாங்கம், இப்போது அதன் நிலையை மாற்றிக் கொண்டு நாளை மறுநாள் சீன கப்பல் அம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு வர அனுமதித்திருக்கிறது.
இலங்கை அரசாங்கத்தின் இந்த செயல் மிகப்பெரிய நம்பிக்கைத் துரோகம் எனவும் அவர் கூறியுள்ளார்.
சீன கப்பல் இலங்கை துறைமுகத்தில் நிறுத்தப்பட்டால், தமிழகம் உள்ளிட்ட தென்மாநிலங்கள் உளவு பார்க்கப்படும். அதுமட்டுமல்லாது இந்திய பாதுகாப்புக்கு ஆபத்து ஏற்படும் என எச்சரித்தப் பிறகும் சீனக் கப்பலுக்கு இலங்கை அனுமதி அளித்துள்ளது.
இலங்கையின் சீன பாசத்திற்கு இது தான் எடுத்துக்காட்டு. இலங்கையின் வேண்டுகோளை ஏற்று அந்நாட்டிற்கு டோர்னியர் 228 வகை போர் விமானத்தை இந்தியா இலவசமாக வழங்குகிறது.
இப்படியாக ராணுவ உதவி, பொருளாதார உதவி அனைத்தையும் பெற்றுக் கொண்டு தான் இந்தியாவுக்கு இலங்கை துரோகம் செய்கிறது.
இந்நிலையில் இலங்கையின் துரோகத்தை இந்தியா புரிந்து கொண்டு அதற்கேற்ற வகையில் வெளியுறவுக் கொள்கையை வகுக்க வேண்டும் என்றும் பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் குறிப்பிட்டுள்ளார்.