ரஷ்யா உக்ரைன் மீதான போர் தொடுத்த பின்பு உலக நாடுகள் அந்த நாட்டை தனிமைப்படுத்தியது. ரஷ்யா மீது தடை விதித்தும் சர்வதேச சந்தையில் தனது ஆதிக்கத்தைத் தொடர்ந்து நிரூபித்து வருகிறது.
ஐரோப்பிய நாடுகளில் பல குறிப்பாக ஜெர்மனியின் பொருளாதார வளர்ச்சியின் போக்கைக் கட்டுப்படுத்தும் கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு விநியோகத்தைத் தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளது.
இதேவேளையில் தனது நாட்டின் வர்த்தகம், பொருளாதாரம், முதலீட்டுச் சந்தை என அனைத்தையும் வல்லரசு நாடுகளின் தடையை உடைத்து முன்னேறக் கையில் இருக்கும் அனைத்து வாய்ப்புகளையும் பயன்படுத்த விளாடிமிர் புடின் (Vladimir Putin) தலைமையிலான அரசு செயற்பட்டு வருகிறது.
அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் பொருளாதாரத் தடைகளுக்கு மத்தியில் ரஷ்ய அரசு அந்நாட்டில் இதுவரை பயன்பாட்டில் இல்லாத இஸ்லாமிய வங்கியியல் சேவையைச் சட்டப்பூர்வமாக்க முடிவு செய்துள்ளது.
இதற்காக ரஷ்ய நிதித்துறை, வெளியுறவுத் துறை, அந்நாட்டு மத்திய வங்கி அதிகாரிகள் பணியாற்றி வருகின்றனர். முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ள நாடுகளில் இருந்து முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்கும் உள்நாட்டு வாடிக்கையாளர்களை ஈர்ப்பதற்கும் நீண்ட கால உறவை மேம்படுத்த வேண்டும் என்பதற்காக ரஷ்யா இஸ்லாமிய வங்கியியல் சேவையை அனுமதிக்க முடிவு செய்துள்ளது.
ரஷ்ய நாளிதழான Kommersant வெளியிட்டுள்ள அறிவிப்பில் கடன் அல்லாத வங்கி நிறுவனங்கள் ரஷ்யாவில் நிதியளிப்புக் கூட்டாண்மை நிறுவனங்களாக (FPO) செயல்படும் என்றும் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு ஷரியா இணக்கமான நிதி திட்டங்களை வழங்கும் என்றும் தெரிவித்துள்ளது.
மேலும் இந்த அறிக்கையின்படி, இந்த நிதியளிப்புக் கூட்டாண்மை நிறுவனங்கள் (FPO) ரஷ்யாவின் மத்திய வங்கியின் கீழ் செயல்படும். இதற்கான சட்ட வரைவு விரைவில் ரஷ்ய நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட உள்ளது.
இஸ்லாமிய வங்கிகள் இஸ்லாமிய வங்கியியல் சேவைகளைத் தங்களது மத வழிகாட்டுதல்களின் படி செயல்படுகின்றன. அதாவது Islamic Financial Systems வாடிக்கையாளர்களுக்கு அளிக்கும் கடனுக்கு வட்டி வசூலிப்பது இல்லை. Shariat (இஸ்லாமிய மதக் கோட்பாடுகள்) படி இது தடை செய்யப்பட்ட ஒன்று. இதற்கு மாறாக வாங்கும் பணத்திற்குக் கட்டணமாக செலுத்துகிறது.