இலங்கை போக்குவரத்து சபையின் (SLTB) பேருந்து டிப்போகளில் இருந்து தனியார் பேருந்துகள் எரிபொருளை பெற்று அவற்றை விற்பனை செய்கிறதா? என்ற சந்தேகம் எழுவதாக இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் கிங்ஸ்லி ரணவக்க (Kingsley Ranawaka) தெரிவித்துள்ளார்.
இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான 4,000 பேருந்துகள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
இது தவிர இலங்கை போக்குவரத்து சபையின் பேருந்து டிப்போக்களில் தனியார் பேருந்துகளுக்கும் எரிபொருள் வழங்கப்படுகிறது.
தனியார் பேருந்துகளுக்கு எரிபொருளை வழங்கும் போது போதிய அளவில் விநியோகம் இடம்பெறுவதில்லை என்ற குற்றச்சாட்டு எழுகிறது.
எனினும் குறித்த அளவு பேருந்து சங்கத்தினராலேயே தீர்மானிக்கப்பட்டது. தொடர்ந்தும் அந்த அடிப்படையிலேயே எரிபொருள் வழங்கப்படுகிறது.
கடந்த தினங்களில் எரிபொருளை வழங்கிய பேருந்து டிப்போகளில் கண்காணிப்புகள் மேற்கொள்ளப்பட்டன.
இருப்பினும், அவ்வாறு எரிபொருளை பெற்றுக் கொண்ட பேருந்துகள் உரிய வீதிகளில் சேவையில் ஈடுபடுவதில்லை என தெரியவந்துள்ளது.
குறித்த பேருந்துகள் ஊடாக எரிபொருள் விற்பனை அல்லது வேறு செயற்பாடுகளுக்கு பயன்படுத்தப்படுகிறதா? என்ற சந்தேகம் எழுகிறது.
இவ்விடயம் தொடர்பில் உரிய அதிகாரிகள் பரிசீலனைகளை மேற்கொள்ள வேண்டும் என இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் கிங்ஸ்லி ரணவக்க தெரிவித்தார்.