“உக்ரைனுக்கு எங்கள் ஆதரவு தொடரும்”… பிரபல நாட்டு மந்திரிகள் தகவல்…!

0
613

ரஷ்யாவின் தாக்குதலுக்கு மத்தியில் உக்ரைன் அதிபரை  அமெரிக்க மந்திரிகள் நேற்று சந்தித்து ஆலோசனை மேற்கொண்டுள்ளனர்.

உக்ரைன், ரஷ்யா போர் தொடர்ந்து 62 வது நாளாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் ரஷ்யாவின் தீவிர தாக்குதலுக்கு மத்தியில் உக்ரைன் தலைநகர் கீவில் அந்த நாட்டு அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கியுடன் அமெரிக்க வெளியுறவு மற்றும் ராணுவ மந்திரிகள் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். அமெரிக்க மந்திரிகளுடனான சந்திப்பின்போது, உக்ரைன் போருக்கு அமெரிக்கா அதிக அளவில் வழங்கி வரும் உதவிகளுக்கு ஜெலன்ஸ்கி நன்றி கூறினார்.

இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், ‘உக்ரைனுக்கு உதவுதல் மற்றும் இந்த பிரச்சினையில் எடுத்துள்ள தெளிவான நிலைப்பாடு போன்றவற்றுக்காக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனுக்கு தனிப்பட்ட நிலையிலும், ஒட்டுமொத்த உக்ரைன் மக்கள் சார்பிலும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். மேலும்  இதைப்போல அமெரிக்க மக்களுக்கும், நாடாளுமன்றத்துக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். இந்த உதவியை நாங்கள் பார்த்தோம், உணர்ந்து கொண்டோம்’ என கூறினார். இந்நிலையில் இந்த பயணத்தில் அடுத்த நிலை பற்றியும் அறிந்துள்ளதாக கூறிய ஜெலன்ஸ்கி, அதேநேரம் தங்கள் கூட்டாளிகளின் ஆதரவை எண்ணிப்பார்ப்பதாகவும் தெரிவித்தார்.

இந்த சந்திப்புக்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய ஆன்டனி பிளிங்கன், ரஷியா தனது போர் லட்சியங்களில் தோல்வி அடைந்திருப்பதாகவும், உக்ரைன் வெற்றி பெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் பேசும் போது, ‘இந்த போரின் எஞ்சிய பகுதிகள் எப்படி இருக்கும்? என்பது எங்களுக்கு தெரியவில்லை, ஆனால் விளாடிமிர் புதினை விட, இறையாண்மை மற்றும் சுதந்திரமான ஒரு உக்ரைன் நீண்ட காலம் இருக்கும் என்பதை நாங்கள் அறிவோம். போரில் உக்ரைன் முன்னோக்கி செல்வதற்கான எங்கள் ஆதரவு தொடரும். இறுதி வெற்றியைக் காணும் வரை அது தொடரும்’ என்று கூறியுள்ளார்.கீவ் நகர தெருக்களில் மக்கள் நடமாட்டத்தை பார்த்ததாக கூறிய பிளிங்கன், இது போரில் கீவ் நகரம் வெற்றி பெற்றதை காட்டுவதாகவும் தெரிவித்தார். மேலும் போர் தொடர்பாக ஐ.நா. பொதுச்செயலாளரிடம் பேசியிருப்பதாகவும், அவர் ரஷிய அதிபருக்கு ஒரு வலுவான செய்தியை வழங்குவார் என நம்புவதாகவும் அவர் தெரிவித்தார்.