அதிபர்கள் ஆசிரியர்கள் பணி பகிஷ்கரிப்பு: பாதிப்படையும் கல்வி நடவடிக்கைகள்

0
276

நாடளாவிய ரீதியில் அதிபர்கள், ஆசிரியர்கள் முன்னெடுத்துவரும் பணி பகிஷ்கரிப்பு போராட்டம் காரணமாக மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் முற்றாகப் பாதிக்கப்பட்டுள்ளன.

நாட்டில் நிலவும் அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடிக்கு உடனடி தீர்வைக் கோரி, அரச பாடசாலைகளின் ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் இன்று பணி பகிஷ்கரிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இலங்கை ஆசிரியர் சங்கம், ஒன்றிணைந்த அதிபர்கள் சங்கம், ஆசிரிய ஆலோசகர்கள் சங்கம் உட்பட பல ஆசிரியர் சங்கங்கள் இணைந்து விடுத்த கோரிக்கைக்கு அமைவாக இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

மலையகம்

இலங்கையின் ஆசிரியர்கள், அரசின் பொருளாதார கொள்கைகள் மற்றும் மனித உரிமை மீறல்களுக்கு எதிராக மேற்கொண்டுள்ள சுகயீன போராட்டத்திற்கு மலையக ஆசிரியர்களும் இணைந்து கொண்டு தமது எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.

நாட்டில் காணப்படும் எரிபொருள் பிரச்சினைக் காரணமாக ஆசிரியர்கள் தொழிலுக்குச் செல்வதில் பாரிய சிக்கல்களை எதிர்நோக்கியுள்ளனர்.

மேலும் அத்தியாவசிய பொருட்களின் தட்டுப்பாடு காரணமாக பல மணி நேரம் ஆசிரியர்கள் வரிசையில் நின்று அந்த பொருட்களைப் பெற்றுக் கொள்வதினால் குறித்த நாட்களில் குறித்த நேரத்திற்குப் பாடசாலைக்குக் கடமைக்கு சமூகமளிக்க முடியாமைக் காரணமாக பல்வேறு மன வேதனைக்கு ஆசிரியர்கள் உட்பட்டுள்ளனர்.

எனவே நாட்டின் எதிர்கால சந்ததியை உருவாக்கும் ஆசிரியர்களான தம்மை சிறந்த மன நிலையுடன் கடமையாற்ற அரசு வழி செய்ய வேண்டும் என்று கோரியே இந்த ஒரு நாள் சுகயீன போராட்டத்தை இன்று ஆசிரியர்கள் முன்னெடுத்துள்ளனர்.

இந்நிலையில் இன்று மலையக பாடசாலைகள் மூடிய நிலையில் காணப்பட்டதுடன், ஆசிரியர்கள் அஞ்சல் அலுவலகங்களில் சுகயீன தந்திகளைப் பாடசாலைக்கு அனுப்பும் நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளமையை காணக்கூடியதாக உள்ளது.

அதிபர், ஆசிரியர்களின் இந்த சுகயீன போராட்டம் தொடர்பான தகவல்களை அறியாத ஒரு சில மாணவர்கள் பாடசாலைக்கு வருகை தந்து திரும்பிச் சென்றதைக் காணமுடிந்துள்ளது.