கன்னியாகுமரி மாவட்டம் தமிழக கேரள எல்லை பகுதியான கொல்லங்கோடு செறுகுழி பகுதியை சேர்ந்தவர் தொழில் அதிபரான கனகராஜ். இவர் குமரி மாவட்டம் முழுவதும் டெட்டால் மொத்த வியாபாரம் செய்யும் தொழில் செய்து வருகிறார்.
இவருக்கு மங்குளி பகுதியில் ஒரு கடையும் உள்ளது. இவர் கடந்த 27 ஆம் தேதி காலை மணிக்கு தனது குடும்பத்தினருடன் கோவில்பட்டியில் உள்ள உறவினரின் திருமணத்திற்கு காரில் சென்றுள்ளனர். திருமணம் முடிந்து அங்கிருந்து வேளாங்கண்ணி மாதா கோவிலுக்கும் சென்றுவிட்டு நேற்று மாலை 6.45 மணிக்கு வீடு வந்தடைந்துள்ளார். அப்போது வீட்டின் கதவை அவரது மனைவி திறக்க முயன்ற போது கதவு உடைக்கப்பட்டு சாத்திய நிலையில் இருந்துள்ளது.
இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த கனகராஜ் மற்றும் குடும்பத்தார் வீட்டின் உள்ளே சென்று பார்த்த போது அறைக்கதவும் உடைக்கப்பட்டு அறையில் இருந்த பீரோவும் உடைக்கப்பட்டு துணிகள் அனைத்தும் சிதறி கிடந்துள்ளது. பீரோவின் ரகசிய அறையில் வைக்கப்பட்டிருந்த 5 லட்சம் ரூபாய் பணம் மற்றும் மனைவி மற்றும் மகளின் கம்மல், மோதிரம், வளையல், நெக்லெஸ் உட்பட 13 சவரன் நகையும் திருட்டு போய் இருந்தது.
உடன், கனகராஜ் கொல்லங்கோடு போலீசாருக்கு தகவல் அளித்தார். தகவல் அறிந்து சம்பவ இடம் வந்த போலீசார் திருட்டு குறித்து விசாரணை நடத்தினர். மேலும் சம்பவ இடத்திற்கு மோப்ப நாய் மற்றும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு சோதனைகள் மேற்கொள்ளபட்டது.
கைரேகை நிபுணர்கள், திருடர்களால் கை பிடிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்ய முயன்ற போது திருடர்கள் கைபிடித்த பகுதிகளை எல்லாம் தண்ணீரை விட்டு அழித்து சென்றுள்ளனர். இதனால் அவர்களால் கைரேகை எடுப்பதில் மிகுந்த சிரமம் ஏற்பட்டது. இது சம்பந்தமாக கொல்லங்கோடு போலீசார் வழக்கு பதிவு செய்து நகை மற்றும் பணத்தை திருடி சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர். ஆனால் திருட்டு நடந்த வீடு இருக்கும் பகுதியை சுற்றி உள்ள பகுதிகளில் எங்கும் சி.சி.டி.வி கேமராக்கள் பொருத்தபடாததால் கொள்ளையர்களை பிடிப்பதில் போலீசாருக்கு சவாலாக உள்ளது.