முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அதுகோரளவின் கொலையாளிகளுக்கு எதிராக குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
கடந்த வருடம் மே மாதம் 09ம் திகதி அன்றைய அரசாங்கத்துக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட கோட்டா கோ கம மற்றும் மைனா கோ கம போராட்டக்காரர்கள் மீது மகிந்த ராஜபக்சவின் ஆதரவாளர்கள் என தெரிவித்து சிலர் தாக்குதல் நடத்தியிருந்தனர்.
மே 9 வன்முறை
இதனையடுத்து நாடு முழுவதும் வெடித்த வன்முறையின் போது நிட்டம்புவை நகரி்ல் வைத்து பொலன்னறுவை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அதுகோரள அடித்துக் கொலை செய்யப்பட்டிருந்தார். அவரது பாதுகாவலரும் இச்சம்பவத்தின் போது கொல்லப்பட்டிருந்தார்.
சம்பவம் தொடர்பில் 42 பேர் பொலிசாரினால் கைது செய்யப்பட்டிருந்தனர். அவர்களில் ஒரு சந்தேக நபர் பின்னர் விடுதலை செய்யப்பட்டார். இன்னும் ஐந்து பேர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர் மேலும் ஒரு சந்தேக நபர் கைது செய்யப்பட முன்னரே வெளிநாட்டுக்குத் தப்பி ஓடியிருந்தார். இன்னொருவர் பொலிசாரிடம் சிக்கிக் கொள்ளாமல் தலைமறைவாகி உள்ளார்.
இந்நிலையில் குறித்த வழக்கின் பிரதிவாதிகளுக்கு நேற்றைய தினம் கம்பஹா மேல்நீதிமன்ற விசேட அமர்வு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
எஞ்சியுள்ள சந்தேக நபர்களுக்கு பிணை வழங்க வேண்டாம் என்றும் அவர்களுக்கு எதிரான வழக்கை வாரத்தில் இரண்டு, மூன்று நாட்கள் அல்லது தினந்தோறும் விசாரித்து விரைவாக தண்டனை வழங்குமாறும் சட்ட மா அதிபர் சார்பில் நீதிமன்றத்தில் வேண்டுகோள் வைக்கப்பட்டுள்ளது.