நாடாளுமன்ற தேர்தலை வலியுறுத்தும் பசில்: மாறுபட்ட நிலைப்பாட்டில் ரணில்

0
54

ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் நாடாளுமன்ற தேர்தலை நடத்த வேண்டும் என்ற நிலைப்பாட்டில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் ஸ்தாப தலைவர் பசில் ராஜபக்ச இருப்பதாக தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

எனினும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மாறுபட்ட நிலைப்பாட்டில் இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இந்த விடயம் தொடர்பில் ஜனாதிபதிக்கும், பசில் ராஜபக்சவுக்கும் இடையில் கடந்த காலங்களில் நேரடி கலந்துரையாடல்களும் இடம்பெற்றிருந்தன.

எவ்வாறாயினும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பெரும்பாலான நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் பொது தேர்தலை நடத்த வேண்டும் என்ற நிலைப்பாட்டில் இருப்பதாகவும் கூறப்படுகின்றது.

நாடாளுமன்ற தேர்தல் 2025 ஆம் ஆண்டே நடத்தப்பட வேண்டும். எனினும் நாடாளுமன்றை முன்கூட்டியே கலைத்து, தேர்தலை அறிவிப்பதற்கு ஜனாதிபதிக்கு அரசியலமைப்பு அதிகாரம் உள்ளது.

இந்நிலையில் கட்சியின் அனைத்து உறுப்பினர்களுடன் பசில் ராஜபகச் சந்திப்பு ஒன்றை நடத்தியுள்ளதாகவும், அதில் சமகால அரசியல் குறித்து பேசியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி எந்தத் தேர்தலாக இருந்தாலும், அதனைச் சந்திக்க வேண்டும் என்று இந்தச் சந்திப்பின் போது பசில் ராஜபக்ச அறிவுறுத்தியதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன் முதலில் வரக்கூடிய எந்தவொரு தேர்தலுக்கும் தயாராகும் வகையில் அரசியல் பணிகளை முன்னெடுக்குமாறு அவர் உறுப்பினர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக கூறப்படுகின்றது.

எவ்வாறாயினும் அரசாங்கத்தில் அமைச்சு பதவிகளை வகிக்கும் பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள் ஜனாதிபதி தேர்தலை முதலில் நடத்த வேண்டும் என்ற நிலைப்பாட்டில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.